Showing posts with label OBOR. Show all posts
Showing posts with label OBOR. Show all posts

Thursday, April 22, 2021

சீனாவின் ஒரேபெல்ட் ஒரேரோடு கனவுத் திட்டம் அவ்வளவுதானா?

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது கலகக்காரர்கள்,  கம்யூனிஸ்டுகளுக்கு ரொம்பவுமே பொருத்தம் என்பதை சீனா இன்னுமொரு முறையும்  நிரூபித்திருக்கிறது. ஒரேபெல்ட்  ஒரேரோடு என்பது சீனாவின் கனவுத்திட்டமாக, ஆதிக்க விஸ்தரிப்புக்கு அடித்தளமாக இருந்தது, இப்போது உலகின் பலபகுதிகளிலும் நிராகரிக்கப்படுகிற ஒன்றாக ஆகிக் கொண்டிருப்பதில், ஆஸ்திரேலிய மாகாணம் ஒன்று சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ஃபெடரல் அரசால் நேற்றைக்கு தேசநலன் கருதி  ரத்து  செய்யப் பட்டிருப்பதில், மிகுந்த வன்மத்துடன் சீனா அதைக்குறித்து எதிர்வினையாற்றியிருப்பதில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.  

  

ஆஸ்திரேலிய விவகாரங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறவர்களுக்கு, சீனக்கம்யூனிஸ்ட் எந்த அளவுக்கு ஆஸ்திரேலியாவின் அரசியல் விவகாரங்களில் ஊடுருவி இருந்தது, ஆதரவுக்குரல் கொடுப்பதற்காக உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு பணம்கொடுத்து போஷித்து வந்தது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை தான்! சீனா தனது ஆட்டத்தை ஓவராகவே ஆடியதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற நேரமும் வந்து விட்டது போலத் தெரிகிறது. OBOR / BRI திட்டம் உலகின் பலபகுதிகளிலும் முட்டுச்சந்தில் வந்து நிற்பதை என்ன என்று சொல்வது? China’s reaction to the cancelling of the dangerous Belt and Road agreement in a “wolf warrior fashion” will end up being a large “own goal” for Beijing, according to the Australian Strategic Policy Institute’s Michael Shoebridge.


ஷி ஜின்பிங்கின் கனவுத்திட்டம் கொஞ்சம் நிதானமாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால் நிறைவேறியிருக்கக் கூடிய சாத்தியம் உள்ளதுதான்! தனது ஆயுட்காலத்திலேயே நடத்திக் காட்டிவிட வேண்டுமென்கிற ஆத்திரமும் அவசரமும் ஷி ஜின்பிங்கை தோற்கடித்துவிடும் என்று தான் இப்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன. China Belted and Roaded என்று தலைப்பிட்டு இந்தச் செய்தியை Daily Telegraph நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்துவரும், முட்டாள்தனங்கள் மட்டும்தான், இப்போது சீனாவுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருக்கின்றன என்றால் அப்படி ஒரு அனுமானத்தில் தவறில்லை.

?

ஸ்ரீலங்காவிலும் சீனாவின் சாகசங்கள் கேள்வி கேட்பார் இல்லாமல் தொடர்ந்து வருவதில், கொஞ்சம் எதிர்ப்பு கிளம்பி வருவது சற்றே ஆறுதல். ஆனால் ராஜபட்ச சகோதரர்கள் ஆட்சியில் ஸ்ரீலங்கா சீனாவின் அடிமை நாடாக ஆக்கப்படுவதை இதுமாதிரி சிறு சலசலப்பு தடுத்து நிறுத்திவிடுமா?

மீண்டும் சந்திப்போம்.

     
  

Wednesday, March 31, 2021

சீனா நாட்டாமை செய்ய அமெரிக்காவே வலிந்து இடம் கொடுக்கிறதா?

மேற்கு ஆசியாவில் சீனா தனது பணபலத்தை வைத்து நுழைந்திருக்கிறது. பாரக் ஒபாமா அதிபராக இருந்த நாட்களில் ஈரானுடன் ஏற்படுத்திக் கொண்ட அணு ஒப்பந்தத்திலிருந்து முந்தைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியேறியதுடன் பொருளாதாரத்தடைகளையும் விதித்தார். இப்போது டெமாக்ரட்டுகள் மீண்டும் பதவிக்கு வந்திருப்பதால் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் மறுபடி நுழைய விரும்புகிறார்கள்.



அடுத்துவரும் 25 ஆண்டுகளில்  400 பில்லியன் டாலர்கள் முதலீடு என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புடன் ஈரானுடன் சீனா ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறது. "இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இருப்பினும் அமெரிக்காவின் தடைகளை மீறும் வண்ணம் சீனா இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் என்று ஊகிக்கப்படுகிறது.இரான் மீது விதிக்கப்பட்ட தடையால் இரான் வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் தடுமாறியது. சர்வதேச வல்லமை பெறுவதற்கான சீனாவின் 70 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் முதலீடு செய்யும் திட்டத்தின் ஒரு விரிவாக்கமாகவே இந்த ஒப்பந்தம் உள்ளது.

கடந்த வருடம் இந்த ஒப்பந்தத்தின் வரைவு கசிந்த பிறகு சீனாவின் எண்ணம் குறித்து இரானியர்கள் சிலர் சந்தேகித்தனர். சீனாவின் `பெல்ட் அண்ட் ரோட்` திட்டம் சீனாவுக்கே அதிகம் பயனளிக்கக்கூடியது. இதில் சில சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஏமாற்றம் அடைந்தன. (அதில் இடம்பெற்றுள்ள நாடுகள் பல சீனாவைக் காட்டிலும் சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஆகும்.) " என்று பிபிசி தனது செய்தியில் சொல்கிறது

இதில் வேடிக்கையான அம்சம் என்னவென்றால் அதிக ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்படும் சீன முதலீடுகள், திட்டம் எதுவும் இதுவரை முழுமையாக நிறைவேறியது இல்லை என்பதுதான். ஆனாலும் சீனவலையில் ஈரான் போன்ற பலநாடுகளும் வலுவில் வந்து விழுவது குறையவே இல்லை.   


ஏற்கெனெவே ஈரானுடன் சபஹர் துறைமுகத்தை  நவீனமயமாக்கும் ஒப்பந்தம் செத்துக்கொண்டிருக்கும் இந்தியா எதிர்நோக்கும் சவால்கள் என்ன என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்கர்களுடைய நம்பர் 1 இடத்தைப்பிடிக்கும் சீன முயற்சிகளுக்கு, அமெரிக்காவே இடம் கொடுக்கும் விசித்திரத்தைப் பார்க்கப்போகிறோமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.      


Monday, February 22, 2021

இந்தியா சீனா பாகிஸ்தான் ::: #CPEC #OBOR என்ன நிலையில் இருக்கிறது?

ஐந்தாண்டுகளுக்கு முன்னால் சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் CPEC, ஷி ஜின்பிங்கின் கனவுத் திட்டமான ஒரே பெல்ட் ஒரே ரோடு CPECஇன் முக்கியமான பகுதியாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டதே! நினைவிருக்கிறதா? இப்போது அந்தக்கனவுத் திட்டம் என்ன நிலையில் இருக்கிறது? 

  

The Khan government has been now striving hard to work hand in hand with their Chinese counterparts, hoping to overcome any damage done from past criticisms of CPEC. But unfortunately, more than the current ruling party’s unaddressed reservations about CPEC, it is their inefficiency and incompetence that is becoming the cause of bottlenecks in the implementation of the multibillion dollar projects, coming precisely at a time when Chinese investors are growing less interested in unprofitable but politically correct projects. This is why the road to CPEC becomes longer and longer by the day என்று டிப்ளமாட் தளத்தில் எழுதி இருக்கிறார் ஒரு லாகூர் பத்திரிகையாளர். காசுக்கு ஏங்கித் தவிக்கும் நாடாக, சீனாவை மட்டுமே எல்லாவற்றிற்கும் எதிர்பார்த்துக்கிடக்கும் client state ஆகக் குறுகிப்போனபிறகு பாகிஸ்தான் செய்வதற்கு வேறென்ன இருக்கிறது?


சீனா கந்துவட்டி ஏகாதிபத்தியமாக வளர்ந்து நிற்கிற  நிலையில், கடன்படுகிற நாடுகளின் கதி என்னவாகும்? ரொம்பதூரம் 
தேடவேண்டியதே இல்லை. வெகு அருகாமையிலேயே இருக்கிறது. 


ஸ்ரீலங்கா
 அனுபவம் கண்முன்னால் இருக்கவே இருக்கிறது. கெட்டபிறகும் கூட சீனாவின் காலடியில் விழுந்து கிடக்கவே விரும்புகிற ஸ்ரீலங்கா ராஜபட்சே சகோதரர்கள் போலவே, கிடப்பதைப் போல, மீள முடியாமல் கிடக்க வேண்டியதுதான்! இந்தியாவிடம் வாங்கிய 3000 கோடி ரூபாய் கடனை எங்கிருந்து வாங்கித் திருப்பிக் கொடுத்தார்களாம்? ராஜபட்சே சகோதரர்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக, சீனக் கடன் புதைகுழிக்குள் அவர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், இந்தியா அதை இலவசமாகக் கொடுத்துவிட வேண்டுமென பேரம் பேசுவதைக் கூட சீனா சகித்துக் கொள்ள முடியாமல் எச்சரித்திருக்கிறது.

இன்னொருபக்கம் ....

அமெரிக்க வர்த்தகத் தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சீனா கோரிவருவதன் பின்னணியில் ;;; ஹுவாவே: டிரம்ப் விதித்த அமெரிக்கத் தடைகளால் பன்றி வளர்ப்பில் கவனம் செலுத்தும் சீன செல்பேசி நிறுவனம் என்று பிபிசி தமிழ் செய்தித்தளம் சொல்கிறதே, அதையும் பார்த்துவிடலாமா?

மீண்டும் சந்திப்போம்.  

Saturday, December 12, 2020

#சீனப்பெருமிதம் CPEC போல வெறும் மாயை தானா?

நண்பர் ஸ்ரீராம் சிலமாதங்களுக்கு முன்னால் ஒரு வாட்சப் வீடியோவை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் ஒரு சீன வங்கி கணக்கில் இருப்பாகக் காட்டிய தங்கக் கட்டிகள் அனைத்துமே போலியானவை என்பது அதன் சாரம்! இங்கே சீனாவைப் பற்றி வெளிவரும் செய்திகளில் எவ்வளவு உண்மை அல்லது நம்பத்தகுந்தவை? எவ்வளவு சதவீதம் காசு கொடுத்து அடிக்கப்படும் வெட்டித் தம்பட்டம்? சீனப் பொருளாதாரம் உண்மையிலேயே காசு கொழிக்கிற ஒன்றுதானா? இந்தக்கேள்விகளுக்கு விடை காண்பது மிகக் கடினமானதுதான்! ஆனால் சில வாரங்களுக்கு முன்னால் Ant Group இன் ஜாக் மா சீன வங்கிகள் பெரும்பாலும் நகை அடகுக்கடைகள் போலத் தான் செயல்படுவதாக ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைத்தார். சர்வதேச நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப் படாத, நம்புவதற்கு எந்த அளவுகோலுமே இல்லாத most unprofessional ரகம் என்பதுதான்  ஜாக் மா சொன்னதன் பொருள்.  34 பில்லியன் டாலர் அளவுக்கு பங்குச் சந்தையில் IPO வெளியிட இருந்த Ant Group இன் முயற்சி சீன அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. சீன அதிபர் ஷி ஜின்பெங்கின் நேரடித்தலையீடு அதிலிருந்தது என்று செய்திகளும் வெளிவந்ததை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்?   


இந்த 48 நிமிட வீடியோவில் முதல் ஒன்பதரை நிமிட தலைப்புச் செய்திகளைத் தள்ளிவிட்டால், 10வது நிமிடத்தில் இருந்து சீன அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எவையெல்லாம் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் தள்ளாடுகின்றன என விரிவாகச் சொல்வதைப் பார்க்கலாம் சீன அரசு இந்த நிறுவனங்களைக் கைகழுவ முடிவெடுத்து விட்டதாகவே செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.   இவைகளில் முதலீடு செய்திருக்கும் உள்நாட்டு /வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கதி என்ன? 



அதுவும் போக எதியோப்பியாவில் நடக்கும் உள்நாட்டுக் கலவரங்களில் டிக்ரே பகுதியில் #BRI ஒரே பெல்ட் ஒரே ரோடு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட சீன முதலீடுகள் அநேகமாகக் காணாமல் போன மாதிரித்தான்! அங்கே வேலை செய்துகொண்டிருந்த சீன ஊழியர்கள் 600 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள் என்பது செய்தியின் ஒருபக்கம் மட்டுமே! மேலும் விரிவாக இந்தப் பிரச்சினையைத் தெரிந்துகொள்ள 

ஏற்கெனெவே பாகிஸ்தானில் #CPEC இந்த கீழ் செய்யப்பட்ட  செலவுகள், திட்டங்கள் அப்படியே அந்தரத்தில் நிற்கிற கதை தெரியுமில்லையா? பாகிஸ்தானுக்கு இந்தக் கடனை அடைக்கிற சக்தி அறவே இல்லை. மேலும் மேலும் சீனாவிடம் ரொக்கக் கடனுக்காக பாகிஸ்தான் கையேந்திநிற்பது தனிக்கதை. 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் அடுத்த வருடம் ஜூனில் நடக்க இருக்கிறது. அதில் ஷி ஜின்பெங் என்ன செய்யப்போகிறார்? சேர்மன் மாவோ மாதிரி சேர்மன் ஷி ஜின்பெங் ஆக ஆயுட்காலத் தலைவராகப் போகிறாரா? அதிரடி மாற்றங்கள் ஏதேனும் வருமா என்பது ஒரு பக்கம்! சீன விவகாரங்களில் இதுவரை குழப்பமான நிலைபாட்டையே எடுத்து வந்திருக்கும் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற பிறகும் அதே மாதிரித் தான் இருக்கப்போகிறாரா?

மனிதர்களால் ஒரு சரியான தீர்வைக் காண முடியாத தருணங்களில் எல்லாம் காலம் தான் முடிவான   தீர்வைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியா மட்டும் தான் சீனாவை எதிர்த்து நிற்க வேண்டுமென்று சீனர்களால் வெவ்வேறு வகையில் சீனாவால் பாதிக்கப் பட்ட தெற்காசிய நாடுகளும், அமெரிக்க ஒன்றியமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நிலையில் காலம் மட்டுமே ஒரு சரியான தீர்வைக் கொண்டு வர முடியுமோ என்னவோ?

மீண்டும் சந்திப்போம். 

Thursday, July 2, 2020

இந்தியா பாகிஸ்தான் சீனா! திரண்டு வரும் போர்மேகங்கள்!

இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழுதிய பதிவுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், சீன அதிபருமான ஷி ஜின்பிங் தனது கனவுத்திட்டத்தை முன்வைத்துப் பேசியதை கொஞ்சம் பார்த்திருக்கிறோம். 2049 ஆம் ஆண்டுக்குள் சீனாவை உலகின் வலிமையான பொருளாதாரமாகவும், சக்தியாகவும் உருவாக்குவதற்கு சபதம் எடுத்துக் கொண்ட மாதிரி மேலோட்டமாக இருந்தாலும், ஷி ஜின்பிங்  தன்னுடைய ஆயுள் காலத்திலேயே சீனாவை உலகின் நட்ட நடுநாயகமாக (Tianxia) ஆக்க முயற்சிக்கிறாரா அல்லது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சரிந்து கொண்டிருக்கிற தனது இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள தடாலடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறாரா? சீனாவின் அண்மைக்கால நடவடிக்கைகளில்  இப்படி சந்தேகம் எழுந்திருப்பதென்னவோ நிஜம்! 


The Print  தளத்தில் சேகர் குப்தா சீனாவைக் குறித்து  உலகநாடுகளிடம் அதிகரித்துவரும் எச்சரிக்கை உணர்வு குறித்து சில முக்கியமான விஷயங்களை இந்த 25 நிமிட வீடியோவில் சொல்கிறார். சீனாவுடன் நெருக்கம் காட்டுவதற்காக, தங்களுடைய நீண்ட காலக் கூட்டாளியான அமெரிக்காவை உதறிய ஆஸ்திரேலியா, பிரிட்டன் இவைகளுடன் நியூசிலாந்து, கனடாவும் சேர்ந்து சீனாவைக் குறித்தான தங்களுடைய கொள்கை அணுகுமுறையில் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்த நாடுகள் மறுபடியும் அமெரிக்க நிலையை ஆதரிக்க ஆரம்பித்திருப்பதற்கு, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவுடன் நெருக்கம் என்கிற நிலைமை இப்போது இல்லை என்பதில் சீனாவுடைய பேராசையுடன் கூடிய ஆதிக்க விஸ்தரிப்புக் கனவுகள் தான் என்பது மிக முக்கியமான காரணம். சீனாவுடன் நெருக்கம் காட்டியதற்காக இப்போது மிகவும் வருத்தப் படுவது ஆஸ்திரேலியா தான்! தனது பாதுகாப்பு பட்ஜெட்டை 40% அதிகரித்து, தனது வருத்தத்துக்குப் பரிகாரம் தேட ஒரு ஆரம்பத்தைத் தொடங்கி வைத்து இருக்கிறது.

பிரிட்டனுக்கு வேறுவிதமான பிரச்சினை! ஹாங்காங் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்குச்  சீனா, கடுமையான சட்டத்தை சிலநாட்களுக்கு முன் அமல் படுத்தியதில், விரும்புகிற ஹாங்காங் குடிமக்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை வழங்க முன்வந்திருக்கிறது. ஆங்கிலம் பேசும் நாடுகள்தான் இப்படி என்றில்லாமல் 
இத்தனைகாலம் பின்னுக்குத் தள்ளி வைக்கப்பட்டு இருந்த தைவான் விஷயமும் கூட இப்போது முன்னுக்கு வர ஆரம்பித்திருக்கிறது என்பதில் சீனத்துப்பூனைக்கு மணிகட்ட  உலகநாடுகள்  பலவும் ஒன்று சேர ஆரம்பித்திருக்கின்றன.

ஆனால் சீனத்துச் சண்டியர் தன்னுடைய உதார்களைக் கொஞ்சமும் குறைத்துக் கொள்ளவில்லை. இந்திய எல்லையில் தனது படைகளைக் குவித்து வருவதோடு, பாகிஸ்தான், நேபாளம் இவைகளையும் இந்தியாவுக்கு எதிராகக் கொம்புசீவிவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் துண்டு துக்காணிகளோடு, வங்காளதேசம், இலங்கை நாடுகளும் சீனாவுடன் கைகோர்க்கலாம். இன்னமும் இவ்விரு நாடுகளுடைய நிலைபாடும் தெளிவாகத் தெரியவில்லை.

ஒரு முழு அளவிலான யுத்தம் இந்தியா சீனாவுக்கிடையே வருமா என்பது சந்தேகமே. ஆனால் முட்டலும் உரசலும் இன்னும் நீண்டநாட்களுக்கு நீடிக்கும். ஒப்பீட்டளவில் சீனாவுடைய ராணுவபலம் இந்தியாவை விட அதிகம் தான் என்றாலும், தன்னுடைய முழுபலத்தையும் காட்டுகிற நிலையில் சீனா இல்லை. முன்னர் 1962 இல் இந்தியாவுக்கு இருந்த பலவீனமான அரசியல் தலைமை மாதிரி  இப்போது இல்லை என்பதோடு இந்திய ராணுவம் இப்போது முழுமையாகத் தயார் நிலையில் இருக்கிறது.

துப்பாக்கி, பீரங்கிகளை விட சீனாவை உயிர்போகிற மாதிரி வலிக்கிற இடமாகப் பொருளாதாரரீதியிலான அடியை இந்தியா கொடுத்திருக்கிறது. டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை இந்தியா தடை செய்திருப்பதில், டிக்டாக் நிறுவனம் ஒன்றுக்கு மட்டுமே 45000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்கிறார்கள். Huawei  நிறுவனத்துக்கான தடையை அமெரிக்கா மட்டுமே இதுநாள்வரை வலியுறுத்தி வந்தது. இப்போது வேறுபல நாடுகளும் சீனத்தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.  
 
பாகிஸ்தானியர்கள் பாடு திண்டாட்டம்தான்! சீனாவுடன் சேர்ந்து கும்மியடிக்கலாம் என்கிற கனவும் கூட நீண்ட  நாட்களுக்கு நிலைக்காது என்கிறமாதிரித்தான் நிலவரம் இருக்கிறது. நேபாளத்துக் கம்யூனிஸ்ட் அரசின் நிலைமைகூட பரிதாபம்தான்! அண்ணன் மகிந்த மாதிரி கோத்தபய ராஜபட்சே சீன ஆதரவு நிலை எடுப்பாரா என்பது கூட 9 ரூபாய் நோட்டு மாதிரியான கேள்விதான்!  

மீண்டும் சந்திப்போம்.   
         

Wednesday, March 4, 2020

முடங்கிப்போன #CPEC பாகிஸ்தான் #பொருளாதாரம் - 01

இன்றைக்கு NDTV இன்னொரு தளத்தில் (Bloomberg) இருந்து இரவல் வாங்கிப்போட்டிருக்கிற ஒரு செய்தி சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் என்கிற CPEC முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கிற கதையைக் கொஞ்சம் விரிவாகவே சொல்லியிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. பெல்ட் & ரோடு இனிஷியேடிவ் சுருக்கமாக BRI சீனாவின் OBOR ஆதிக்கக் கனவுகளின் ஒருபகுதியாக மிகுந்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட CPEC, இன்று களையிழந்து அப்படியே அந்தரத்தில் நிற்கிறதாம்!

2018 சீனத் தம்பட்டம் என்னவானது? 
   
ஒரு விரிவாக்கப்பட்ட ஆழ்கடல் துறைமுகம், விமான நிலையம், சீனாவின் மேற்குப்புற மாகாணக்கடைசி வரை இணைக்கிற தரமான சாலைகள், ரயில்வே பாதைகள்,தொழிற்சாலைகள், பைப்லைன்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று கனவென்னவோ மிகப் பெரியதாகத்தான் இருந்தது. 62 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இது வரை 19 பில்லியன் டாலர்கள் வரை ஆகியிருக்கிறது என்பதில், பாகிஸ்தான் திரும்பிச் செலுத்தவேண்டிய தவணை, வட்டி எவ்வளவு என்கிற விவரம் அவ்வளவாக வெளியே வரவில்லை. கெஞ்சிக் கூத்தாடி சவூதி அரேபியாவிடமிருந்து கொஞ்சம், IMF இன் கடுமையான நிபந்தனைகளை ஏற்றபிறகு ஒரு 6 பில்லியன் டாலர் வாங்கி, அடுத்த தவணைக்கடனாக இன்னொரு 6 பில்லியன் டாலர் கடனுக்காகக் கையேந்திக் கொண்டு இருக்கிற பாகிஸ்தான் மீது சீனா நம்பிக்கை இழந்து விட்டதன் வெளிப்பாடா இது? CPEC ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து ஏழாண்டுகளாகின்றன என்பதில்  எதனால் திட்டமிட்டபடி வேலைகள் மளமளவென்று நடக்காமல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

திட்டத்தின் ஒரிஜினல் நோக்கப்படி, OBOR என்பது சீனாவின் புதிய பட்டுப்பாதை! சீனர்களுடைய கடலாதிக்கத்தை தங்குதடையில்லாமல் விரிவு படுத்துகிற கனவோடு ஆரம்பிக்கப்பட்டது தான்! தற்போதைய நாட்களில் குறுகிய மலாக்கா ஜலசந்தி வழியாகவே சீன வர்த்தகக் கப்பல்கள் பயணிக்கின்றன. இந்தக் கடல்பாதை, பல்வேறு தரப்புகளில் இருந்து மறிக்கப்படலாம் என்பதான சினேரியோவை மாற்றுவதோடு, தூரம் குறைவான அரேபியக்கடல் பிராந்தியம் சீன வணிகம் தங்குதடை இல்லாமல் நடப்பதற்கு தற்போதைக்கு பாகிஸ்தானில் இருக்கிற  க்வாடார் துறைமுகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதோடு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் சாக்கில் இந்தியாவுக்கு மிக அருகே சீனக்கடற்படை உலாவலாம்! தேவைப்பட்டால் கடற்படை தளமாகவும் மாறலாம்! பொருளாதாரத்தில் போட்டியாக வளர்ந்துவரும் இந்திய நாட்டுக்கு  உபத்திரவமும் கொடுக்கலாம் என்பது அதன் கேந்திர முக்கியத்துவம்.


திட்டத்தில் ஒரு பழுதுமில்லை! ஆனால் பாகிஸ்தான் சீனாவுடன் அமைக்கவிருக்கும் க்வாடார் பகுதி முழுவதும் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி! 


பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ஒருபகுதி வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது என்பது ஒருபக்கம். பலூச் இன மக்கள் வாழ்கிற பிராந்தியம். பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் பலூச் மக்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலைவேண்டி வன்முறைகளில் இறங்கிவருவது சீனாவுக்குப் பெரும் தலைவலி! அந்த மக்களுக்கு மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் அமைத்துத்தருகிறோம் என்று சீனா முயற்சித்தது கொஞ்சமும்  எடுபடவில்லை. 

அடுத்து வரும் பதிவுகளில் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசலாம்.

மீண்டும் சந்திப்போம்.                               

Friday, February 28, 2020

மீண்டும் முன்னுக்கு வரும் Quad Initiative! உயிர் பெறுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் 24. 25 ஆகிய இருநாட்களில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்து போயிருப்பது பற்றி இந்தப்பக்கங்களில் எழுதுவதற்கு எதுவுமே இல்லையா என்று  இரண்டுநாட்களாகத் தகவல்களைத் தேடிச் சரி பார்த்துக் கொண்டிருந்தேன். இந்திய ஊடகங்களில் அதிகம் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்ட பல விஷயங்கள் இருந்தன என்பது இந்திய ஊடகங்களின் போதாமை என்பதற்கு மேல் சொல்ல அதிகமில்லை, Quad Initiative என்பது அதில் ஒன்று. 


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு குறித்த உரையாடல் Quadrilateral Security Dialogue (QSD, also known as the Quad நடக்கவேண்டும் என்பதை முதலில் 2007 இலேயே முன்மொழிந்தவர் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே. அமெரிக்கத் துணை அதிபர் டிக் செனி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்ட், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மூவரும் ஆரம்பத்தில் ஆதரவு நிலையெடுத்தார்கள். மலபார் கடற்பயிற்சி என்று இந்தியப்பெருங்கடல் பகுதியில் 1992 இல் இந்திய அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப்பயிற்சியாக ஆரம்பித்தது 2007 இல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டுப் பயிற்சியாக வங்காள விரிகுடா பகுதியில் விரிவடைந்தது. இந்திய இடது சாரிகள் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தையும் இந்த கடற்படைக் கூட்டுப்பயிற்சியையும் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். சீனா இந்தப் பயிற்சிகளைக் குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை என்றாலும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் காலையூன்ற வங்காள தேசம், மியன்மார் இருநாடுகளுடனும் அதிக நெருக்கத்தைக் காண்பித்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் நான்கு  நாடுகளுக்கும் Quadrilateral Initiative மீதான விளக்கம் கோருகிற demarche என்கிற கண்டனத்தை சீனா தெரிவித்ததில் ஆஸ்திரேலியா முதலில் அடுத்து இந்தியா இருநாடுகளும்  Quad விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி கொண்டன என்பது பழைய கதை.

2017 ASEAN Summits மணிலாவில் நடந்தபோது மறுபடியும் இந்த நான்கு நாடுகளின் கூட்டணி மீதான பேச்சு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய நால்வருக்குள்ளும் நடந்ததில் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை உயிர்ப்பிப்பது என்று முடிவானது. The initiation of an American, Japanese, Australian and Indian defense arrangement, modeled on the concept of a Democratic Peace, has been credited to Japanese Prime Minister Shinzo Abe.. The Quadrilateral was supposed to establish an "Asian Arc of Democracy," envisioned to ultimately include countries in central Asia, Mongolia, the Korean peninsula, and other countries in Southeast Asia: "virtually all the countries on China’s periphery, except for China itself  என்று சொல்லப் பட்டாலும் அதிகாரிகள் மட்டத்தில் 2017 - 2019 இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை கூடிப்பேசி இருப்பது , கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைச்சர் மட்டத்தில் கூடிப்பேசியது என்ற அளவோடு நிற்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தன்னுடைய பேச்சில்  Quad Initiative பற்றிக் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்க முடிகிறது.


“Together, the Prime Minister and I are revitalizing the Quad Initiative with the United States, India, Australia, and Japan,” Trump said, speaking after Modi at a joint press conference in New Delhi on the second day of his visit to India. “Since I took office, we have held the first Quad ministerial meeting — I guess you would call it a meeting, but it seems like so much more than that — and expanded cooperation on counterterrorism, cybersecurity, and maritime security to ensure a free and open Indo-Pacific,” he added. 
ஆசியாவின் NATO என்று ஈசியாகக் கடந்துபோய்விட முடியாதபடி, இந்த நான்கு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படுமானால், சீனாவின் கடலாதிக்கத் திட்டமான புதிய பட்டுப்பாதை BRI / OBOR திட்டத்துக்கு  செக் வைக்கக் கூடியதாகவிருக்கும் என்பது உறுதி.  

மீண்டும் சந்திப்போம். 

Sunday, October 6, 2019

சீனா எழுபது! கந்துவட்டி ஏகாதிபத்தியமாக மாறிய சீனா!

சீனர்களுடைய ஆதிக்க விஸ்தரிப்புக் கனவுகளின் செயல் வடிவமாக இருப்பது ஒரே பெல்ட் ஒரே ரோடு (OBOR)  என்கிற Belt Road Initiative (BRI). 2049 க்குள்ளாக சீனாவை முற்றிலும் வளர்ந்த நாடாக வளமான, வலுவான நாடாக மாற்றுவேன் என்று சீனா எழுபது கொண்டாட்டங்களில் ஜி ஜின்பிங் பேசியது, சராசரி அரசியல்வாதிகளைப்போல , வெறும் பேச்சோ கனவோ இல்லை. இந்த நூற்றாண்டு சீனாவுடையது தான் என்று அவர் உறுதியாக நம்புகிறார். 2013 வாக்கிலேயே அதன் செயல்வடிவம்  தொடங்கிவிட்டது என்று பார்த்திருக்கிறோம். 



ஒருலட்சம் கோடி டாலர் மதிப்பீட்டில் 65நாடுகளை இணைக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டமாக BRI தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது. மலாக்கா ஜலசந்தி வழியாகவே தன்னுடைய கடல்வழி வணிகம், போக்கு வரத்தை மேற்கொள்ள வேண்டியிருந்த பலவீனத்தை சீனா CPEC சீனா பாகிஸ்தானிய எகனாமிக் காரிடார் என்று பாகிஸ்தான் வசமுள்ள குவாடார் துறைமுகத்தை சாலைவழியாக சீனாவின் மையபகுதியுடன் இணைப்பதில் அரேபியக்கடல் வழியாகத் தனது கடல்வணிகம், கடற்படை வலிமையைப் பெருக்கிக் கொள்ள முனைந்திருக்கிறது.  



இந்த 43 நிமிட வீடியோ சீனாவின் கடல்வழி மற்றும் சாலைகள் வழியாக ஓர் புதிய வர்த்தகப்பாதையை அமைப்பதில் ஏழை நாடுகளை சீனா எப்படி வளைத்துப்போடுகிறது , ஊழலுக்கு இடம் கொடுக்கும் தலைவர்களை பயன்படுத்தி எப்படி உள்ளே நுழைகிறது என்பதைச்   சுருக்கமாக விவரிக்கிறார்கள். 

மேலே உள்ள டாக்குமென்டரியின் இரண்டாம் பகுதி இது. இதில் கிர்கிஸ்தானிலிருந்து வடமேற்கு ஜெர்மனியில் உள்ள டுயிஸ்பர்க் நகர் வரை இணைக்கிற திட்டத்தைப்பற்றிச் சொல்கிறார்கள்.

எப்படிச் செயல்படுத்தப்போகிறார்கள் என்பதில் தான் சீனத் தந்திரம், இன்றைய சீனாவில்   யார் யார் என்னென்ன வகையில் ஆதிக்க சக்திகளாக வளர்ந்திருக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாம் முக்கியமானதாக  இருக்கிறது. 
  
இதெல்லாம் வெறும் புள்ளிவிவரங்கள்! இதிலேயே மலைத்துப் போய் நின்று விடாதீர்கள்! டெங்  சியாவோ பிங் காலத்தைய தொழில் வளர்ச்சியில் சீனாவுக்கும் இதர நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சீனாவுக்கே சாதகமாக இருந்தது என்பது ஒரு பெரிய ப்ளஸ். இதைப்பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டில் அடிப்படைக் கட்டுமான நிறுவனங்கள் அசுர வளர்ச்சி அடைந்திருந்தன. அடுத்தது கட்டுமானத்துறை! பழைய அடையாளங்களைத் துடைத்தெறிந்துவிட்டு, சீனாவில் புதுப்புது கட்டுமானங்கள், புதுப்புது நகரங்கள் வளர்ந்தன. மலிவான எலெக்ட்ரானிக் சாதனங்கள் தொலைதொடர்புக் கட்டுமானங்கள் என்று வளர்ந்தன. கூடவே இவைகளுக்கு நிதியுதவி செய்கிற வங்கிகளும்! இப்படி பல்வேறு துறைகளில் கொழுத்து வளர்ந்த நிறுவனங்கள் தான் சீனாவின் விஸ்தரிப்பு கனவுகளின் அடித்தளமாக, உள்நாட்டை விட்டு வெளியே வந்து வெளிநாடுகளிலும் கடை விரித்து. அங்குள்ள உள்ளூர்ப் பொருளாதாரத்தைக் கபளீகரம் செய்கிற அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஆக்டொபசாக, சீனா இன்றைக்கொரு கந்துவட்டி ஏகாதிபத்தியமாக வளர்ந்து நிற்பதில் வந்து முடிந்திருக்கிறது.

சீனவங்கிகளின் கடனுதவியில் கட்டப்பட்ட இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகம், விமான நிலையம் எதுவுமே வெகுஜனப்பயன்பாட்டுக்கு வராமல், வாங்கிய கடனுக்கு வட்டி கூடக்  கட்டமுடியாத நிலையில் சீனாவுக்கு 99 வருடக் குத்தகைக்கு விட நேர்ந்தது நினைவிருக்கிறதா? வெறும் 110 டாலர் கோடி கடன் தான்! அதற்கே ஒருபகுதியைச் சீனாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிவந்தது.  

மாலத்தீவுகளும் கூட  இதேபோல சீனக்கடன்வலையில் சிக்கிக் கொண்டு தவித்ததும், இந்தியா றூறு கோடி டாலர்களைக் கொடுத்து உதவி அதை மீட்டதும் கூட சமீபத்தில் நடந்தது தான்! நினைவிருக்கிறதா? தெரிந்தே சீனக் கந்துவட்டிக் காரர்களிடம் சிக்கிக் கொள்வதற்குத் தயாராக இருக்கும் ஏழை ஆப்பிரிக்க நாடுகள் கதை கொஞ்சம் வித்தியாசமானது.அந்தக் கதையின் மையக்கருவாக கொழுத்த லஞ்சம் என்பதில் புதிதாக எதுவுமில்லை.

இங்கே கொஞ்சம் தேன்தடவி எட்டிக்கசப்பை மறைக்க முயற்சி செய்கிறார்கள்! படித்துப்பாருங்கள்!  

மீண்டும் சந்திப்போம். 
              

Sunday, January 27, 2019

சீன பாகிஸ்தானிய எகனாமிக் காரிடார்! CPEC




ஒரே பெல்ட் ஒரே ரோடு என்று சீனா தன்னுடைய ஆதிக்கத்தை, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் வலுப்படுத்திக் கொள்ள தொடர்ந்து செய்து வரும் முயற்சிகளை இந்த ஹேஷ்டாகுகளில் எழுதிவரும் பகிர்வுகளில் இந்தச் செய்தி ஒரு வருடத்துக்கு முன்னால் பகிரப்பட்டது. ஆனால் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்ற தகவலே தெரியாமல் இருப்பவர்கள் இங்கே ஏராளம்!

இப்போது தெரிந்துகொள்வதில் தவறில்லையே!
#OBOR #BRI #CPEC என #சீனவிஸ்தரிப்புக்கனவுகள் வேகவேகமாக செயல்வடிவம் பெற்றுவரும் நேரமிது. #IndoPacific பிராந்தியத்தில் தனக்குப் போட்டியாக என்று மட்டுமில்லை, தனக்கு அடுத்த இடத்திலும் கூட வேறெந்தநாடும் வந்துவிடக்கூடாதென்று #சீனா மிக்க கவனமாகக் காய்நகர்த்திவருகிறது.

#சீனத்துச்சண்டியர் இந்த அளவு வளர்ந்ததில் #ஒபாமாநிர்வாகத்தின்எட்டுஆண்டு அலட்சியம் முக்கியப்பங்குவகித்தது என்றால் பொய்யல்ல. இன்று #தென்சீனக்கடல் பகுதியில் #ஏழுசெயற்கைத்தீவுகள் உருவாக்கி அவற்றை #முழுஅளவுராணுவத்தளங்கள் ஆக மாற்றியிருப்பதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிலிருக்கக் கூடிய வாய்ப்பை அன்றைய அமெரிக்க #அதிபர்ஒபாமா தவறவிட்டார்.

#மலாக்காஜலசந்தி வழியாகத்தான் சீன வர்த்தகக்கப்பல்கள் முக்கியமாகக் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களைக் கொண்டுவரவேண்டுமென்கிற நிலையில் #தென்சீனக்கடல் பிராந்தியம் முழுவதுமே தனக்குச்சொந்தம் என்று கிட்டத்தட்ட #போர்ப்பிரகடனமாகவே சீனா அறிவித்ததில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்துமே கதிகலங்கிப்போய்க்கிடக்கின்றன

#சீனத்துச்சண்டியர் பார்வை அரேபியக் கடல் இந்தியப்பெருங்கடல், என்று விழுந்ததில் நேரடியாக பொருளாதார, ராணுவ, கேந்திர ரீதியிலான அச்சுறுத்தல்கள் இந்தியாவுக்குத்தான் என்று தெளிவாகவே #BeltandRoadInitiative என்கிற #OBOR காட்டுகிறது.இது முழுக்க வர்த்தகத்துக்கானது தான் என்று சொல்லப் பட்டாலும். பொருளாதாரமும் அரசியலும் பிரிக்க முடியாதவை.

சீனாவின் #PLA #செஞ்சேனை நவீனப்படுத்தப் படுவதிலும், ஆயுதப்போட்டியிலும் அமெரிக்கா, ரஷ்யா இவைகளுக்கு அடுத்த நிலையில் முந்தி நிற்கிறது. ஐரோப்பியநாடுகள் சீனாவை மிஞ்சுகிற தொழில்நுட்பம், பயிற்சிபெற்ற ராணுவம் என்று வைத்திருந்தாலும் சந்தை, பொருளாதார ரீதியாக அமெரிக்கா அல்லது சீனாவை அண்டியிருக்க வேண்டியவைகளாக இருக்கின்றன.

இதுவரை சொன்னதை பின்னணியாக நினைவில் வைத்துக் கொண்டு இந்தமாதம் 1,2 தேதிகளில் #சுஷ்மாஸ்வராஜ் நேபாளம் சென்று புதிதாக அமையவிருக்கிற பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிக்குழுக்களின் அவியல் கூட்டணி அரசுத்தலைவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார்.

இதைப்பற்றிக் காத்மண்டுவில் இருந்து நேபாளப்பத்திரிகையாளர் பட்டாராய் என்ன சொல்கிறார் என்பதை விரிவாக கீழே லிங்கில் படிக்கலாம்.கம்யூனிஸ்டுகளையும் சட்டாம்பிள்ளைத் தனத்தையும் பிரிக்க முடியாதென்பது #மார்க்சீயமெய்ஞானம் எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்லது குறுங்குழுவாக இருந்தாலும் ஒன்றோடொன்று ஒத்துப்போக மாட்டார்கள். இரண்டே தனிநபர் கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் யார் சட்டாம்பிள்ளை என்பது முதலில் தெரிந்தாக வேண்டுமே! உள்ளூரிலேயே இப்படி என்றால் வெவ்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட்கட்சிகள் எப்படி இருக்கும் என்பது கற்பனைக்கும் மிஞ்சியது
இதைப்புரிந்துகொள்ள முடிந்தால் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன சாதித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் என்பதும் புரியும்!

===========================================
#பிரதமர்நரேந்திரமோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண் அமைச்சர்கள் மிகத்திறமையுடன் செயல்படுகிறவர்கள் என்று முந்தைய ப்ளஸ் ஒன்றில் சொல்லியிருந்தேன். மிகவும் பொதுப்படையான ஸ்டேட்மென்ட் என்றாலும் முழுக்க முழுக்க உண்மையானது அது. #பெண்அமைச்சர்கள் என்று சொல்லும் போது அதில் #நம்பர்1இடத்தைப்பிடிப்பவர் #சுஷ்மாஸ்வராஜ்
#வெளியுறவுத்துறைஅமைச்சகம் இவரது பொறுப்பின்கீழ் புதுப் பொலிவுடன் திறமையாகச் செயல்பட்டுவருகிறது



The Diplomat

thediplomat.com

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை