Sunday, July 4, 2021

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. 70000 பார்வையாளர்களுடன்  டியனான்மன் சதுக்கத்தில்  நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி எதைச் சொன்னது? சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுச் சுவடுகளையா? கட்சிப்பெருமிதத்தையா? இவை எதுவுமே இல்லையாம்! ஷி ஜின்பிங்! என்கிற ஒற்றைப்புள்ளியை மகிமைப்படுத்துகிற மாதிரியே கொண்டாட்டம் நடந்தது, முடிந்தது!


சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் ஒருமணிநேரம் பேசினார். பேச்சின் முக்கிய  அம்சமாக உலகநாடுகளை மிரட்டுவது இருந்தது. அமெரிக்கர்களை நேரடியாக எச்சரிப்பதாக மட்டுமே இருந்தது என்பதன் பின்னால் என்னென்ன இருந்ததாம்? இங்கே இந்திரா காலத்தில் தேவகாந்த் பரூவா என்கிற காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான் இந்திரா தான் இந்தியா இந்தியாதான் இந்திரா என்று உளறிய மாதிரி ஷி ஜின்பிங் தான் கட்சி! சீனக் கம்யூனிஸ்ட் கட்சிதான் ஷி ஜின்பிங்  என்று மாபெரும் தலைவர் மாவோவையும் மிஞ்சிய தலைவருக்கெல்லாம் தலைவராக உள்ளூர் மக்களுக்கும் உலகத்துக்கும் விளம்பரப்படுத்திக் கொள்ள நடத்திய நிகழ்ச்சியாக மட்டுமே இந்த நிகழ்ச்சி இருந்ததாம்! 


வேறு யார் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ, கடன்வலையில் முழுமையாகச் சிக்கிக்கொண்டு சீனா ஆட்டுவிக்கிறபடியெல்லாம் ஆடவேண்டிய நிலையில் இருக்கிற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உய்கர் முஸ்லிம்களுடைய விஷயமாகத் தனக்கு எதுவும் தெரியாது என்று சிறிதுகாலத்துக்கு முன்புவரை சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது சீன அரசு சொல்வதை அப்படியே நம்புகிறாராம்! ஏற்றுக் கொள்கிறாராம்! வேறு வழி?


ஷி ஜின்பிங் உள்ளூர்க் கூட்டத்துக்கு முன் வீர உரை நிகழ்த்திக் கொண்டிருந்த அதேநேரம், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், அதை மேற்கோள் காட்டி CNN முதலானவை சாட்டிலைட் படங்களைக் காட்டி சீனா யூமென் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை Silo எனப்படும் பதுங்குகுழிகளில் தயார்நிலையில் வைத்திருப்பதாக, அதேமாதிரி இன்னொரு இடத்திலும் வைத்திருப்பதாக செய்தியைப் பரபரப்பாகப் பரப்பிக் கொண்டிருந்ததை மேலே 6 நிமிட வீடியோவில் நையாண்டி செய்கிறார்கள். இரண்டாவது உலகப்போரில் இங்கிலாந்து இதேமாதிரி அட்டையினால் செய்த நூற்றுக்கணக்கான டாங்குகளை படம்பிடித்து ஜெர்மனியைக் குழப்பியது நினைவுக்கு வருமேயானால் ஏய்ப்பதில் கலைஞர்களான பிரிட்டிஷ் அரசியல்வாதிகளையும் சீனர்கள் மிஞ்சிவருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஏய்ப்பதில், திசை திரும்புவதில், வெற்றுக்கோஷங்களிலேயே  எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் வல்லமை கொண்டது கம்யூனிஸ்ட் கட்சி என்பதை இப்போதாவது ஒப்புக் கொள்கிறீர்களா?

மீண்டும் சந்திப்போம்.      

Thursday, July 1, 2021

நூறு பூக்கள் மலரட்டும்! நூற்றாண்டு காணும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றுக்கோஷங்கள்!

ஜூலை 1 சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு! இது குறித்து ஏராளமான செய்திக்குறிப்புக்கள், கட்டுரைகள் என்று வந்து கொண்டே இருக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகளைக் கவனிப்பவர்களுக்கு, அவர்களுடைய கிளர்ச்சியூட்டும்  கோஷங்கள் மிகவும் பரிச்சயமாகியிருக்கும். இப்படி வெறும் கோஷங்களே மிகப்பெரிய அரசியல் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதாக ஆரம்பமானதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தான், அதன் பிதாமகர் மா சேதுங் தான் என்பதைப் புரிந்துகொள்ள பிபிசி தளத்தில் இன்று வெளியாகி இருக்கும் இந்தச் செய்திக் கட்டுரை கொஞ்சம் உதவியாக இருக்கும்.  கடந்துவந்த நூற்றாண்டில் மா சேதுங் முதல் தற்போதைய ஷி ஜின்பிங் வரை எப்படி கோஷங்களே அரசியலானது (பல சமயங்களில் படுஅபத்தமாகவும்) என்பதை ஒரு 11 கோஷங்களை எடுத்துக்கொண்டு சுருக்கமாகப்பேசும் கட்டுரை இது.




இந்த 6 நிமிட வீடியோவில் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரதிநிதிகளுடன் மிகச் சிறிய அளவிலான சீனர்களுடன் 1821 ஜூலை 1 அன்று துவங்கிய சீனக்கம்யூனிஸ்ட் கட்சி நாற்பது வருடங்களுக்குக்காகவே ரஷ்யர்களையும் மிஞ்சிய அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாவாக மாறியது என்பது சரித்திர விசித்திரம். இந்த விசித்திரத்தை இந்து தமிழ்திசை நாளிதழில் மு ராமநாதன் கொஞ்சம் பிரமிப்புடன் எழுதியிருக்கிறார். 

எல்லாப் பேரியக்கங்களின் பயணமும் சிறிய அடிவைப்பில்தான் தொடங்கியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயணமும் அப்படித்தான் ஆரம்பமானது. நூறாண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் (ஜூலை 1, 1921) ஷாங்காய் நகரில், ஒரு ஓட்டு வீட்டில் கட்சி நிறுவப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, அங்கே நடந்த கூட்டத்தில் 57 பேராளர்கள் கலந்துகொண்டனர். அதில் ஹூனான் விவசாயி மகன் ஒருவரும் இருந்தார். பீஜிங் பல்கலைக்கழகத்தில் நூலக உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் மா சேதுங். அவரது படம்தான் இப்போது தியானென்மென் சதுக்கத்தின் முகப்பை அலங்கரித்துவருகிறது.

முன்கதை: பல சாம்ராஜ்ஜியங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு ஜனவரி 1, 1912 அன்று சீனக் குடியரசு பிறந்தது. புதிய குடியரசை உருவாக்கிய அமைப்புகள் டாக்டர் சன் யாட் சென்-ஐத் தலைவராக நியமித்தன. சன் ஒரு அறிவுஜீவி. திறமான அரசியலர் அல்லர். சீனா போன்ற பெரிய தேசத்தை அவரால் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியவில்லை. நாடெங்கிலும் யுத்த பிரபுக்கள் போராட்டங்களிலும் கலகங்களிலும் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். மறுபுறம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பும் இருந்தது. இதனால், சினமுற்ற சீன இளைஞர்கள் மே 4, 1919 அன்று தியானென்மென் சதுக்கத்தில் கூடினார்கள். ‘மே 4 இயக்கம்’ என்று வரலாறு குறித்து வைத்திருக்கும் இந்தப் போராட்டம்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தொடக்கம் குறித்தது. இந்த இயக்கத்தை முன்னின்று நடத்திய லீ தாவ்ஜவ், சென் து சியூ எனும் இருவர்தான் 1921-ல் கம்யூனிஸ்ட் கட்சியையும் நிறுவினார்கள். இதில் முன்னவர் மாவோவின் குரு.

முதல் உள்நாட்டு யுத்தம் (1927-1937) ::சன் 1925-ல் மறைந்தார். அடுத்து, சீனக் குடியரசின் ஆட்சியையும் ஆளுங்கட்சியாக இருந்த கோமிங்டாங் கட்சியையும் கைப்பற்றினார் சியாங் கை ஷேக். சோவியத் ஒன்றியம் கோமிங்டாங்குக்கு ஆதரவாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியையும் கோமிங்டாங்குக்கு இசைவாக இருக்கும்படி வலியுறுத்தியது. ஆனால், சியாங் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகப் பாவித்தார். அவர்களை ஒழித்துக்கட்டத் தொடங்கினார். அதற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான ராணுவத்தைக் கட்டியது. அதற்கு ஆகஸ்ட் 1, 1927-ல் மக்கள் விடுதலை ராணுவம் என்று பெயரிட்டது. அதுதான் இன்று உலகத்தின் மிகப் பெரிய ராணுவமாக வளர்ந்திருக்கிறது.

கோமிங்டாங்குடனான யுத்தத்தின்போது ஒரு கட்டத்தில் மாவோ பின்னேறும் தந்திரத்தைப் பயன்படுத்தினார். கோமிங்டாங் பலவீனமாக இருக்கும் இடங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயணத்துக்கு ‘நெடும் பயணம்’ (1934-35) என்று பெயர். பயணத்தின்போது பசியிலும் பனியிலும் பலியானவர்கள் பலர். என்றாலும், அந்தப் பயணத்தில் எண்ணற்ற கிராமங்கள் வழியாக ராணுவம் முன்னேறியது. இதன் மூலம் கட்சி மக்களுக்கு நெருக்கமாகியது. மாவோ மக்கள் தலைவரானார்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பு (1937-1945)::வல்லரசாகும் கனவில் இருந்த ஜப்பான், சீனாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்துவந்தது. உச்சமாக 1937-ல் நான்ஜிங் நகரில் ஜப்பான் நிகழ்த்திய வன்கொடுமைகள் வரலாற்றைக் கரிய பக்கங்களால் நிறைத்தன. இந்தக் காலகட்டத்தில் கோமிங்டாங்கும் கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றிணைந்து தங்களது பொது எதிரியான ஜப்பானை எதிர்த்தனர். சீனர்கள் இழந்தது அதிகம். எனினும் விடாப்பிடியாகப் போராடினார்கள். இரண்டாம் உலகப் போரின் (1939-45) முடிவு ஜப்பானுக்குச் சாதகமாக இல்லை. அது நேச நாடுகளிடம் சரணடைந்தது, சீனாவிலிருந்தும் வெளியேறியது.

இரண்டாம் உள்நாட்டு யுத்தம் (1945-1949)::பொது எதிரி வெளியேறியதும் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தது. இந்த முறை கோமிங்டாங்குக்கு அமெரிக்கா உதவியது. எனில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியிருந்தது. ஆயுத பலமும் கூடியிருந்தது. ஆகவே, வெற்றி வசமானது. கோமிங்டாங்கின் தலைவர் சியாங், தைவானுக்குத் தப்பியோடினார். அக்டோபர் 1, 1949 அன்று தியானென்மென் சதுக்கத்தின் முகப்பில் மக்கள் சீனக் குடியரசை நிறுவினார் மாவோ.

மாவோவின் காலம் (1949-1976)::பெரும் கனவுகளோடு தொடங்கியது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி. ‘நூறு பூக்கள் மலரட்டும்’ என்பது மாவோவின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்று. எல்லாக் கருத்துகளும் முட்டிமோதித் தெளியட்டும் என்பது பொருள். ஆனால், அவரது ஆட்சியில் விமர்சனங்கள் சகித்துக்கொள்ளப் படவில்லை. கூட்டுப் பண்ணைகளையும் தொழில் உற்பத்தியையும் இலக்காகக் கொண்டு மாவோ தொடங்கிய பெரும் பாய்ச்சல் திட்டமும் (1958-1962), பழமையைத் தகர்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட கலாச்சாரப் புரட்சியும் (1966-1976) பலன் தரவில்லை. மாறாக, பஞ்சம் வந்தது. மக்கள் மடிந்தனர், அச்சுறுத்தலுக்கு உள்ளாயினர். பின்னாளில் கட்சி இந்த இரண்டு முன்னெடுப்புகளும் பிழையானவை என்று ஒப்புக்கொண்டது. அதே வேளையில், மாவோவின் காலத்தில்தான் சீனா ஒரு தேசமாகத் திரண்டது, மக்களின் கல்வியறிவும் ஆரோக்கியமும் வளர்ந்தது.

தாராளமயத்தின் காலம் (1978-2013)::1976-ல் மாவோ காலமானார். அடுத்து, தலைமை ஏற்ற டெங் சியோ பிங்,1978-ல் அந்நிய முதலீடுகளுக்கு வாசல் திறந்தார். சீனாவின் அபரிமிதமான மனித வளத்தைப் பயன் படுத்தி நாட்டைத் தொழில்மயமாக்கினார். செல்வம் சேர்ந்தது. அந்த அதிவேக வளர்ச்சியின் காலத்தில் டெங் தனது சகாக்களை சர்வதேச அரங்கில் அடக்கி வாசிக்கச் சொன்னார். ‘உன் சக்தியை வெளிக்காட்டிக்கொள்ளாதே’ என்றார். தனது பாதைக்கு டெங் வைத்த பெயர் சீனா பாணியிலான சோஷலிஸம். டெங் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்ல, 1989-ல் தியானென்மென் அடக்குமுறைக்காகவும் நினைவுகூரப் படுகிறார். 1919-ஐப் போலவே 1989-லும் தியானென்மென்னில் போராடியவர்கள் இளைஞர்கள். அவர்கள் ஜனநாயக உரிமைகளுக்காகவும் ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்கள். இந்த முறை தன் மக்களின் போராட்டத்தை ஒடுக்கியது ‘மக்கள் விடுதலை ராணுவம்’. மாணவர்கள் மட்டுமல்ல; சாலையோரம் வேடிக்கை பார்த்தவர்களும் துருப்புகளால் கொல்லப்பட்டார்கள். சீனாவின் வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புப் பக்கங்களில் ஒன்றானது தியானென்மென் படுகொலைகள்.

ஷி ஜின்பிங் காலம் (2013- இன்றுவரை)::ஷி ஜின்பிங் 2012-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரானார். பிறகு, அதே ஆண்டு முப்படைகளின் தலைவரானார். அடுத்து, 2013-ல் நாட்டின் அதிபரானார். இந்த வரிசை எதேச்சையானதல்ல. கட்சி (1921), ராணுவம் (1927), ஆட்சி (1949) என்பதுதான் வரலாற்றின் வரிசை; முக்கியத்துவத்தின் வரிசையும் அதுதான். ராணுவமும் ஆட்சியும் கட்சிக்குக் கட்டுப் பட்டவை. இந்த நூற்றாண்டு விழாவில் இதை ஷி மீண்டும் நிறுவுவார். தனக்கு முந்தைய தலைவர்களிலிருந்து ஷி வேறுபட்டவர். ஷி-க்கு முன்பு அதிபராக இருந்த ஜியாங் ஜெமின் (1993-2003), ஹு ஜின்டாவ் (2003-2013) இருவரின் பதவிக்காலமும் பத்தாண்டுகள். இந்த விதியை ஷி மாற்றப்போகிறார். அவரது பதவிக்காலம் 2023-ஐத் தாண்டியும் நீடிக்கும். அடுத்து, சீனா அடக்கி வாசிக்க வேண்டும் என்று டெங் கருதினார். ஆனால், காத்திருப்பின் காலம் முடிந்து விட்டது என்பது ஷி-யின் கருத்து. தென்சீனக் கடலிலும், இந்திய எல்லையிலும், அமெரிக்க வணிகத்திலும் சீனா தனது ஆக்ரோஷமான முகத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியா இதற்கு ஏற்றவாறு காய் நகர்த்த வேண்டும்.

டெங்குக்கு மாவோவின் மீது விமர்சனங்கள் இருந்தன. எனில், மாவோவிடம் குற்றத்தைவிடக் குணமே அதிகம் என்றார் டெங். கட்சியின் அடையாளமாக மாவோவைத் தான் நிறுத்தினார் டெங். ஷி-யும் அதையேதான் செய்கிறார். ஆனால், ஒரு படி மேலே போகிறார். மாவோவின் நெடும் பயணமும், ஜப்பானிய எதிர்ப்பும் வரலாற்றில் இடம்பெறும். ஆனால், பெரும் பாய்ச்சல் திட்டமும் கலாச்சாரப் புரட்சியும் வரலாற்றில் அவசியமற்றவை என்பது ஷி ஜின்பிங்கின் கருத்து. அதாவது மாவோவின் குணம் மட்டும் வரலாற்றில் இடம்பெறும். கூடவே, சீனாவின் அடையாளமாக மாவோ மட்டுமில்லை, அடுத்த இடத்தில் ஷி-யும் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். வருங்காலத்தில் தியானென்மென் சதுக்கத்தின் முகப்பில் மாவோவின் படத்துக்கு அருகில் ஷி-யின் படமும் இடம்பெறக்கூடும்.

ஒரு நூறு ஆண்டுகளின் கதையை இதற்கும் குறைவாக சுருக்கிவிட முடியாதுதான். ஆனால் முக்கிய நிகழ்வுகள், விளைவுகள், தலைவர்கள் உருவான விதம், அவர்களின் தாக்கம் இவைகளை இப்படி எழுத்தில் கொண்டுவந்து விட முடியாது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் மிகவும்  பலவீனப்பட்டு, உள்ளூரிலும் போட்டி இல்லாமல் சண்டியரானவர் மா சேதுங். அவருடைய காலம் சீனமக்களுக்குப் பெரும் சோதனையும் அழிவும் தந்த காலம் என்பதைக் கட்டுரை சொல்ல மறந்தது, டியானன்மென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் நசுக்கப்பட்டதை மட்டும் மிகைப்படுத்தி டெங் சியாவோ பிங் காலத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அலப்பறை, வெற்றுக்கோஷங்கள் எல்லாம் அடக்கிவைக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியில் தான் மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வும் இருந்தது என்பதை மெய்ப்பித்த காலம் என்பதை ராமநாதன் சௌகரியமாகக் கடந்து போய்விடுகிறார். ஷி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியை மாவோ காலத்தைய வெறியூட்டப் பட்ட நிலைக்குக் கொண்டுபோவதில் பெருமளவு வெற்றி பெற்று விட்டார் என்ற பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப் படுவதன் உண்மை நிலவரத்தைக் காலம் தான் சொல்ல வேண்டும்.  

சீன வரலாறு மிகவும் நெடியது. அதன் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சியின் வரலாறு முழுக்க முழுக்க மிகைப்படுத்தப் பட்டது என்பது ஒரு பார்வை.              

 

Tuesday, June 22, 2021

முதலில் சீனா! இப்போது ஈரான்! அடுத்தடுத்து கேலிக்குள்ளாகும் American Tianxia!

உலகின் நட்டநடுநாயகம் என்று பொருள்படும் Tianxia என்கிற சொல்லை வைத்து சீனாவின் உலகளாவிய ஆதிக்கக் கனவுகளை இந்தப்பக்கங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். 1950 முதல் தொடங்கும் நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது. 2050 முதல் தொடங்கும்  நூற்றாண்டு சீனாவுடையதாக இருக்கும் என்ற கனவும் கருத்தும் 2013 இல் உருவாக்கப்பட்டது. அதேநேரம் சீன அதிபர் ஷி ஜின்பிங் அந்தக்கனவுக்குச் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கியதில் Belt and Road Initiative என்கிற ஒரே பெல்ட் ஒரே ரோடு (OBOR) வேகம் எடுத்து இன்றைக்கு அங்கங்கே முட்டுச்சந்தில் போய் நிற்கிறது. அமெரிக்கா உடனான பொருளாதார, ராணுவப் போட்டியில் முந்த ஒரு காலக்கெடு 2049 என்பதாக 2019 இல் தீர்மானிக்கப்பட்டதையும் இங்கே பார்த்திருக்கிறோம்.  


ஷி ஜின்பிங் சற்றே அவசரப்பட்டு விட்டாரோ? கனவு நனவாகும் கால அளவைக்குறைத்து வூஹான் வைரசைப் பரப்பியதில் சீனர்களுடைய ஆதிக்கக்கனவுகளும் தடை பட்டு நிற்கின்றன. அதேநேரம் அமெரிக்காவும் முன்னை விட இன்னும் அதிகமாகப் பலவீனப்பட்டு வருகிற மாதிரி இருக்கிறதே! மேலே 4 நிமிட வீடியோ, ஈரானின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற இப்ராஹிம் ரைசி அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுக்கிறார். 60 வயதாகும் ரைசி தலைமை நீதிபதியாக இருந்த 1988 காலங்களில் 5000 நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படக் காரணம் என்று அம்னெஸ்டி இன்டர்நெஷனல் புழுங்குகிறது. அது மட்டுமா? அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்க விருப்பமில்லை, ஈரானின் ஏவுகணைத்திட்டத்தைக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதுமில்லை என்றும் அதிரடியாக அறிவித்திருக்கிறார். அமெரிக்கா ஈரான் மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை நீக்கியே ஆகவேண்டும் எனவும் முழங்கியிருக்கிறார். 


வீடியோ 2 நிமிடத்துக்கும் குறைவுதான்! காட்டம் அதிகம்! ஈரானின் ஏவுகணைத்திட்டம் குறித்தோ, சவூதி அரேபியா போன்ற பகைமை நாடுகளுக்கெதிராக  பிராந்தியத்தில் ஹிஸ்பொல்லா போன்ற கிளர்ச்சி இயக்கங்களுக்கு ஆயுதம் மற்றும் பணவசதி அளிப்பது குறித்தோ நேற்றைக்கு நிருபர்களிடம் எதுவுமே பேச மறுத்துவிட்டார். இத்தனைக்கும் அதிபராக வருகிற ஆகஸ்ட் மாதத்தில்தான் பொறுப்பேற்றுக்கொள்ளப் போகிறார். அதற்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு ஆப்பு, கடுப்பு அடிக்கிற வேலையில் இறங்கியாகி விட்டதென்றால், அமெரிக்கர்களுடைய பரிதாப நிலைமையைக் கொஞ்சம் கற்பனை செய்துதான் பாருங்களேன்!

ஆனால் ஈரானை அடக்குவதில் இஸ்ரேல் அதீத ஆர்வம் காட்டுகிறது. இப்ராஹிம் ரைசி நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்திலேயே ஈரானின் அணுவுலை ஒன்றில் தீவிபத்தொன்று ஏற்பட்டிருக்கிறது. இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்தான் என்று ஈரான் அநேகமாக அறிவிக்கவும் கூடும்.  


பிரிட்டனைத் தவிர வேறெந்த NATO கூட்டாளியும் பக்கபலமாக நிற்கத்தயாராக இல்லாத  அமெரிக்க சோகம் சீனாவின் லாபமாக மாறவில்லை என்பது சீனர்களுடைய சரிவர? கர்மாவா? வீடியோ 6 நிமிடம்தான்.

மீண்டும் சந்திப்போம்.      

Tuesday, June 15, 2021

இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது?

இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது? என்றதலைப்பில் வெ.சந்திரமோகன் இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை என்னதான் சொல்ல வருகிறது? முதலில் என்ன எழுதியிருந்தது என்பதை முதலில் பார்த்துவிடலாம். இந்துதமிழ்திசைக்கு நன்றி    

இஸ்ரேலில் புதிய ஆட்சி மலர்ந்துவிட்டது. நீண்ட நாட்களாகப் பிரதமராகப் பதவி வகித்த லிகுட் கட்சித் தலைவர் பெஞ்சமி நெதன்யாஹு, எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் அமரும் சூழலுக்குத் தள்ளப்பட்டு விட்டார். யமினா கட்சியின் தலைவர் நஃப்தாலி பென்னெட் புதிய பிரதமராகியிருக்கிறார். மொத்தம் 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளு மன்றமான ‘க்னெஸ்ஸெட்’டில் நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 60-59 என நூலிழை வித்தியாசத்தில் புதிய அரசு அமைந்திருக்கிறது. ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை! 


49 வயதாகும் பென்னெட், அமெரிக்காவிலிருந்து வந்து இஸ்ரேலில் குடியேறிய யூதக் குடும்பத்தில் பிறந்தவர். பெரும் தொழிலதிபராக அறியப்பட்டவர். கோடீஸ்வரர். தீவிர வலதுசாரிச் சிந்தனை கொண்டவர். அதிதீவிர தேசியவாதி. மதப்பற்றுள்ள யூதர்கள் அணியும் ‘கிப்பா’ எனும் குல்லாவை அணிந்து பிரதமராகும் முதல் தலைவர் இவர்தான்! 2006 முதல் 2008 வரை நெதன்யாஹுவின் உதவியாளராகப் பணியாற்றியவர். நெதன்யாஹுவுடனான கருத்து வேறுபாட்டால், லிகுட் கட்சியிலிருந்து வெளியேறியவர். ஒருகட்டத்தில் ‘நியூ ரைட்’ எனும் வலதுசாரிக் கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியை உள்ளடக்கிய யமினா கட்சிதான் இன்றைக்கு ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறது.

ஆட்சி மாற்றம் ஏன்?

கடந்த 2019 ஏப்ரல் 9-ல் நடைபெற்ற தேர்தல் முதல், 2021 மார்ச் 23-ல் நடைபெற்ற தேர்தல் வரை கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 4 தேர்தல்களை இஸ்ரேல் எதிர்கொண்டுவிட்டது. அதன் பின்னரும் போதிய எண்ணிக்கை இல்லாததால் ஆட்சியமைப்பதில் கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்து வந்த நிலையில் தான் வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் இணைந்து இப்படிஒரு வானவில் கூட்டணியை ஏற்படுத்தியிருக்கின்றன. நஃப்தாலி பென்னெட் தலைமையிலான வலதுசாரிக் கட்சியான யமினா கட்சி, முன்னாள் ஊடகவியலாளரான யாயிர் லாபிட் தலைமையிலான மையவாதக் கட்சியான ‘யேஷ் ஆட்டிட்’, அரேபியர்கள் பிரதானமாக அங்கம் வகிக்கும் ‘யுனைட்டட் அரபு லிஸ்ட்’ எனும் கட்சி ஆகியவற்றுடன் மேலும் 5 கட்சிகளும் இக்கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்றன.


போர், ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல் எனத் தொடர்ந்து சர்ச்சையில் அடிபட்டுவரும் தேசமான இஸ்ரேல், இன்றுவரை ஒரு ஜனநாயக நாடுதான். பெரும்பான்மை கிட்டாததால் தொடர்ச்சியாக தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு அமைவதற்கான சூழல் இஸ்ரேலில் நிலவவே செய்கிறது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில்தான் இங்கு தேர்தல் நடத்தப்படுகிறது. ஸ்திரத்தன்மையற்ற அரசு தொடரக் கூடாது; மீண்டும் தேர்தல் கூடாது எனும் அடிப்படையில், மாறுபட்ட கொள்கைகள் கொண்ட இந்த 8 கட்சிகளும் இணைந்திருக்கின்றன.

27 அமைச்சர்கள்

21 சதவீதம் அரேபியர்கள் வசிக்கும் இஸ்ரேலில் ஓர் அரபுக் கட்சி, ஆளும் கூட்டணியில் பங்கேற்பது இதுவே முதல்முறை. ‘யுனைட்டட் அரபு லிஸ்ட்’ கட்சியின் தலைவரான மன்சோர் அப்பாஸ், அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று முன்பே எதிர்பார்ப்பு இருந்தது. அது இப்போது பூர்த்தியாகியிருக்கிறது. மொத்தம் 27 அமைச்சர்களில் 9 பேர் பெண்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான நிபந்தனையின்படி, தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் யாயிர் லாபிட், 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமராகப் பதவி வகிப்பார். அவரது யேஷ் ஆட்டிட் கட்சியைச் சேர்ந்த மிக்கி லெவி நாடாளுமன்ற சபாநாயகராகியிருக்கிறார்.

வாக்கெடுப்பு முடிந்ததும் பென்னெட்டுக்குக் கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் சற்று நேரம் அமர்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார் நெதன்யாஹு. எனினும், இந்தக் கூட்டணியை ஏற்றுக்கொள்ள அவருக்குச் சுத்தமாக இஷ்டம் இல்லை. “ஆபத்தான இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என நாடாளுமன்றத்திலேயே சூளுரைத்திருக்கிறார்.

மொத்தம் 15 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்திருக்கும் நெதன்யாஹு, 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்தப் பதவியில் அமர்ந்திருந்தவர். எனவே, பதவி சுகத்தை விட்டுக்கொடுக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் தங்கள்கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டால்தான், புதிய அரசு தனது பதவிக் காலத்தை நிறைவுசெய்ய முடியும். கூட்டணியில் சிறு உரசல் என்றாலும் அதைப் பெரிதாக்கி ஆட்சியைக் கலைத்துவிடுவார் நெதன்யாஹு. நாடாளுமன்றத்தில் பென்னெட் உரையாற்றும்போது நெதன்யாஹுவின் ஆதரவாளர்கள், “பென்னெட் ஒருகுற்றவாளி, பொய்யர்” என்று கூச்சல் போட்டுக்கொண்டே இருந்ததைப் பார்க்கும்போது நிலவரம் அவ்வளவு சிலாக்கியம் இல்லை என்பது புரிந்தது. 

ஊழல் புகார்களை எதிர்கொண்டிருக்கும் நெதன்யாஹு கட்சித் தலைமைப் பதவியில் தொடர்வது சவாலாகி இருக்கிறது. எனினும், எதிலும் எளிதில் விட்டுக் கொடுக்காத தன்மை கொண்ட நெதன்யாஹு தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றம் சாத்தியமா?

பாலஸ்தீனத்துடனான பதற்றத்தைக் குறைப்பதும் அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுவதும்தான் புதிய அரசின் முக்கியக் குறிக்கோள்கள் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. எனினும், பாலஸ்தீனர்களைப் பொறுத்த வரை இந்தக் கூட்டணி அரசு நன்மை எதையும் செய்யப் போவதில்லை எனும் எண்ணம்தான் இருக்கிறது.

காரணம், புதிய பிரதமர் பென்னெட் தீவிர தேசியவாதி. பாலஸ்தீனத்துக்கு எதிரான கொள்கை கொண்டவர். பாலஸ்தீனப் போராளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பேசுபவர். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தையும் எதிர்ப்பவர். ஆக, நெதன்யாஹு ஆட்சிக்கு நேர் எதிரான ஆட்சி இஸ்ரேலில் அமைந்துவிடவில்லை. எனவே, அந்நாட்டின் ஒட்டு மொத்த அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை!

இஸ்ரேல் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘‘இஸ்ரேல் பிரதமராக பதவியேற்றுள்ள நஃப்தாலி பென்னட்டுக்கு வாழ்த்துகள். இந்தியா, இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் மேம்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுடன் 30 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த தருணத்தில், நான் தங்களைச் சந்திக்கவும், இருதரப்பு உறவை வலுப்படுத்தவும் ஆர்வமாக உள்ளேன்’’ என கூறி உள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கும் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள யாயிர் லாபிட் தனது ட்விட்டர் பதிவில், ’இந்தியா - இஸ்ரேல் இடையே நட்புறவை மேம்படுத்த இஸ்ரேலின் புதிய அரசு ஒத்துழைக்கும்’ என்று கூறியுள்ளார்.

கடைசி இரண்டு பாராக்களை விடுங்கள். சந்திரமோகன் செய்திகளைத்தொகுத்து என்ன சொல்லவருகிறார்?

தடித்த எழுத்தில் இருக்கும் பகுதிகளே அவரது தொகுப்பு முற்றுப்பெறாமலும் அரைகுறையாகவும் இருப்பதைச் சொல்லும். அதேநேரம் பிரச்சினைகள் என்னென்ன என்பதையும் கூட.

இஸ்ரேலில் தற்போது நடந்திருக்கும் ஆட்சிமாற்றம் மக்களுடைய விருப்பத்தில் நடந்த ஒன்றல்ல. நாடாளு மன்ற  வாக்கெடுப்பிலும் கூட பாதிக்குப்பாதி என்று தான் இருந்திருக்கிறது. விகிதாச்சார பிரதிநிதித்துவம் Proportionate Representation என்கிற தேர்தல் முறையில் நம்மூரில் இருப்பதுபோல ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தாலும் எதிர்த்துவிழுந்த வாக்குகளையும் அள்ளிக்கொண்டு போகிற மாதிரி இல்லாமல் வாங்கிய ஓட்டுகளுக்குத் தகுந்த விகிதத்தில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிற முறை. இதனால் தான் கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை பொதுத்தேர்தல் நடந்தும்கூட எந்த ஒருகட்சியோ, கூட்டணியோ பெரும்பான்மை பெற முடியாத சிக்கல்.

இப்போது எப்படித் தீர்ந்திருக்கிறது? அரபிகளுடைய கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால்தான் என்று சொல்லும்போதே கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியையும் சேர்த்துக் கட்டிய கதையாக, இந்தக் கூட்டணி நீண்டகாலம் நிலைக்காது என்பதையும் சொல்லி விடுகிறது.

மீண்டும் சந்திப்போம்.              

Friday, May 21, 2021

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா?

ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல்  நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இருதரப்பும் ஒப்புக்கொண்டு இருப்பதில் உலகம் நிம்மதிப்பெருமூச்சுவிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்பதற்கு மேல் வேறு ஒன்றுமில்லை. ஹமாஸ் செமத்தியாக அடி வாங்கிய போதிலும் இந்த ceasefire தங்களுக்குக் கிடைத்த வெற்றி எனத்தம்பட்டம் அடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது. 


இஸ்ரேலியப்பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹு  தலைமையிலான பாதுகாப்புக்கானகேபினெட் கூடி எகிப்தியர்கள் முன்கையெடுத்த போர்நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. உடனே ஹமாஸ் இயக்கமும் ஒப்புக் கொள்வதாக அறிவித்ததில் பாலஸ்தீனிய அரசின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. Gaza பாலஸ்தீனத்தில் இருந்தாலும் அங்கே ஹமாஸின் ஆதிக்கம் மட்டுமே செல்லுபடியாகக்கூடியதாக இருப்பதே பிரச்சினை நீடிப்பதன் முழுக்காரணம். ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கமாக மட்டுமே இருப்பதும் பாலஸ்தீன மக்களுடைய ஏகோபித்த பிரதிநிதியாக இருந்ததில்லை என்பதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.  In a rare public rift, Netanyahu on Wednesday briefly rebuffed a public call from President Joe Biden to wind things down, appearing determined to inflict maximum damage on Hamas in a war that could help save his political career.But late Thursday, Netanyahu’s office announced the cease-fire agreement. Hamas quickly followed suit. Militants continued to launch sporadic rocket at Israel early Friday, before the 2 am cease-fire took effect என்ற செய்தியிலேயே பிரச்சினையின் நுண்ணரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறதா? 


ஹமாஸுக்கு எங்கிருந்து பணமும் ஆதரவும் வருகிறது? கத்தார் ஈரான், துருக்கி என்று பலநாடுகள் வரிசைகட்டி நிற்கின்றன. உலக அளவில் மூன்றாவது பணக்கார பயங்கரவாத இயக்கம் ஹமாஸ், வருடாந்திர வருமானம் அல்லது நன்கொடை 70 கோடி அமெரிக்க டாலர்கள். இதில் ஒருசதவீதம் கூட காசா பகுதியில் வசிக்கும் ஏழை பாலஸ்தீனியர்களுக்காக செலவிடப்படுவதில்லை. ஆனால் ஹமாசின் 27% வரிச்சுமையை காசாவில் வசிக்கும் இருபது லட்சம் பாலஸ்தீனியர்கள் சுமந்தாக வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்?


1967 இல் இஸ்ரேலை விழுங்க எகிப்து, சிரியா, ஜோர்டான் என பல அரபுநாடுகள் ஒரு யுத்தத்தை ஆரம்பித்தன.மேலே 16 நிமிட வீடியோ ஆறே நாள் நடந்த யுத்தம் என்னவாயிற்று என்பதைச் சொல்கிறது.

இப்போது இருதரப்பும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற போர் நிறுத்தம் நிரந்தரமானது இல்லை என்பது இங்கே எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்! இந்தத் தருணத்தில் ஆட்டத்தில் ஈரான் தவிர துருக்கியும் ரஷ்யாவும் சேர்ந்து கொண்டிருன்றன. அதுபோக  சீனாவும் உள்ளே நுழையத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.  

இஸ்ரேலின் Iron Dome மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி சிரியாவிலிருந்து ஏவப்பட்ட சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழைய முடிந்தது ரஷ்யத்தொழில் நுட்ப  சாமர்த்தியம் என்று நம்பவேண்டி இருக்கிறது.    

ஆக, போர்நிறுத்தம் தற்காலிகமானது தான்! புதிதாகக் களத்துக்குள் நுழைந்திருக்கிற ஆட்டக்காரர்களை அமெரிக்காவோ இஸ்ரேலோ விரும்பவில்லை. இஸ்ரேல் தனது யுத்ததந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்கிற வரை ஒரு நிழல் யுத்தத்தை நடத்திக்கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

மீண்டும் சந்திப்போம்.  

Tuesday, May 18, 2021

ஹமாஸ் பயங்கரவாத இயக்கமும் பரிதாபத்துக்குரிய பாலஸ்தீனிய மக்களும்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத இயக்கம் ராக்கெட் மற்றும் ஏவுகணைத் தாக்குதத்தல்களைத் தொடங்கி இன்றோடு 10 நாட்களாகிறது. இதுவரை 3000+ ராக்கெட் கணைகள் வீசப்பட்டதற்கு  இஸ்ரேல் சரியான பதிலடி கொடுத்து வருவதில், ஹமாஸ் தீவீரவாதிகளுக்கும் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் இடையில் சிக்கி அல்லாடுவது  பாலஸ்தீனிய மக்கள் தான்!


இஸ்ரேல் - காஸா இடையிலான மோதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நேற்று (மே 16) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: இஸ்ரேல் - காஸா இடையிலான மோதலில் இந்தியத் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் உயிரிழந்த அனைவரின் மறைவுக்கும் இந்திய அரசு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக தணிப்பது அவசியம். தற்போதைய மோதல் உச்சநிலையை எட்டாமல் தவிர்க்க அதைச் செய்தாக வேண்டும்.

இருநாடுகளுக்கும் இடையே நேரடியாகவும் அர்த்தமுள்ள முறையிலும் பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருப்பது இருதரப்பினருக்கும் இடையிலான அவநம்பிக்கையை அதிகரித்து வருகிறது. இது எதிர்காலத்திலும் தற்போது ஏற்பட்டுள்ளதை போன்ற மோதல் சம்பவங்களுக்கான வாய்ப்புகளை மட்டுமே அதிகரிக்கும்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாதகமான சூழலை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இருதரப்பினர் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்.என்பதாக இந்திய அரசின் நிலை தெளிவாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீனத்துக்கு மட்டுமே ஆதரவு என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு சமநிலையுடனான பார்வை இந்திய வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்டு வருவதை இங்கே கவனித்தாக வேண்டும். பாலஸ்தீன். இஸ்ரேல் என இருநாடுகளையுமே இந்தியா சமமாக  அங்கீகரித்து, நீராட்டிப்பேச்சுவார்த்தையில் மட்டுமே சுமுகத்தீர்வை எட்ட முடியும் என்பதையும் சொல்கிறது.    

ஆனால் பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தடங்கலாக இருப்பது எது? யார்? என்ற கேள்விக்கான பதிலில் தான்இப்போதுவரை தொடரும் மோதல்களுக்கான காரணமும் இருக்கிறது. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை சுற்றியிருந்த அரபுநாடுகள் எதுவும் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை எவரும் அங்கீகரிக்கவே இல்லை. 

The Palestine Question என்று தேடினால்  சுமார் 12,00,00,000 தேடல் முடிவுகள் இருப்பதாக கூகிள் தகவல் சொல்லும். சரியான தீர்வு கண்முன்னால் இருந்தும் நாடுவோரைத் தான் காணோம் என்பது பிரச்சினையின் சோகம்.

7ம.நே 

பாலஸ்தீனுக்காக ஆளாளுக்கு பொங்கினாலும் அந்த பாலஸ்தீன் தேசத்தில் அவர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கின்றதா என்றால் இல்லை. பாலஸ்தீன சிங்கம் யாசர் அராபத் அந்த பரிதாபத்துகுரிய மக்களின் பெரும் தலைவராக விளங்கினார், அவரின் ஒரு விரல் அசைவுக்கே பொத்த பாலஸ்தீனமும் "இண்டிபாதா" என உலகை உலுக்கும் விதமாக தெருக்களில் இறங்கி நடந்தது. அவர் சொன்னால் எல்லாம் சரியாக இருக்கும் என நம்பினார்கள், அவரும் அந்த நம்பிக்கையினை கடைசி வரை காப்பாற்றினார்



(ஆனால் இலங்கையில் அப்படி ஒரு தமிழர் எழுச்சி வரவே இல்லை, வெறும் துப்பாக்கிகளை தூக்கி கொண்டு புலிகள் திரிந்தார்களே தவிர, பெரும் மக்கள் எழுச்சி பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை)

அவரால்(அராபத்)  எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் போராடினார், சோவியத் இருந்தபொழுதே அமையாத பாலஸ்தீனம் அதன் பின் அமையுமா? என்ற அவநம்பிக்கை கொஞ்சமின்றி போராடினார்

அவரின் போராட்டத்தின் உச்சபட்ச வெற்றி அதுவரை பாலஸ்தீன் என்றொரு நாடே இல்லை என சொல்லிவந்த இஸ்ரேல் இறங்கி வந்து "பாலஸ்தீன் பகுதி" என ஒன்றை அறிவித்து அதற்கு சுயாட்சியும் கொடுத்தது

அரபாத்தின் மாபெரும் வெற்றி அது, அந்த அரக்கன் இஸ்ரேலை பணிய வைத்து தங்களுக்கு ஒரு இடமும் அடையாளமும் பெற்று கொடுத்தார்

ஓரளவு அமைதி திரும்பியிருந்தது. அராபத்துக்கும் நோபல் பரிசெல்லாம் கொடுத்தார்கள். ஆனால் ஹமாஸ் இலங்கை பிரபாகரன் பாணியில் ஆட்டம் போட்டது, அராபத் போராட்டத்தை விற்றுவிட்டார் என்றது, அதுவரை ஒரே அணியில் இருந்த பாலஸ்தீன் போராட்டம் ஹமாஸால் பிரிக்கபட்டது. அராபத் எவ்வளவோ சொல்லிபார்த்தார், இதெல்லாம் அழிவில் முடியும், நாங்களெல்லாம் பெரும் அழிவினை கண்டவர்கள், உலகில் எல்லோராலும் சக இஸ்லாமிய தேசங்களாலும் கைவிடபட்டவர்கள் நாம், இந்த முடிவினை கொண்டு சுயாட்சியாக வாழ ஆரம்பிப்போம் அதிலிருந்து பிரிதொருநாள் நமக்கு விடியும் என சொல்லி பார்தார்

ஹமாஸ் அடங்கவில்லை. ஹமாஸின் போக்கு அராபத்துக்கு பெரும் சந்தேகத்தை உண்டாக்கியது, இது தனக்கு எதிரான சதி என்பதை அவர் உணர்ந்தார்.

அவர் அச்சபட்டபடியே ஹமாஸ் பேயாட்டம் ஆட, இஸ்ரேல் அராபத்துக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிற்று பாலஸ்தீனியர்களை கட்டுபடுத்த வேண்டியது அராபத் பொறுப்பு என அவருக்கு பெரும் நெருக்கடி கொடுத்தது. பாலஸ்தீனியரின் தலைவர் அராபத் அவர் ஒருவரைத்தான் அந்த மக்களின் பிரதிநியாக கருதுகின்றோம், துப்பாக்கி தூக்கும் எல்லோரையும் அவருக்கு சமமாக நினைத்து பேசமுடியாது என சொன்ன இஸ்ரேலின் ராஜதந்திர கருத்தில் சில தந்திர வரிகளும் இருந்தன‌. ஹமாஸ் செய்த அட்டகாசமெல்லாம் அராபத் தலையில் விழ அவரும் வீட்டுகாவலில் வைக்கபட பின் அவரும் காலமானார்

அவருக்கு பின் முகமது அப்பாஸ் பாலஸ்தீன ஆட்சியாளராக வந்தாலும் போராட்டம் ஹமாஸின் கரங்களுக்கு சென்றுவிட்டது. இப்பொழுது ஒரு பெரும் வல்லரசுக்கு இணையாக அதாவது விமானபடை கப்பல் படை மட்டும் இல்லாமல் பெரும்  ராக்கெட் தாக்குதலில் ஹமாஸ் இறங்கியிருக்கின்றது.ஆனால் அதனால் இஸ்ரேலை அசைத்து பார்க்க முடிகின்றதா என்றால் இல்லை , மாறாக இஸ்ரேல் தன் வான் தடுப்பு சாதனங்களை சோதித்து புதிது புதிதாக மேம்படுத்தி பலம்பெறுகின்றது.

ஹமாஸின் தாக்குதலும் இஸ்ரேலின் பதிலடியும் ஒருமாதிரி சந்தேகங்களை பாலஸ்தீனத்திலே ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுதான் நிஜம், முகமது அப்பாஸின் பேட்டி அதைத்தான் சொல்கின்றது

அராபத் ஆயுதமுனையில் பெறாத வெற்றியினை ஹமாஸ் பெற்றுவிடும் என்பது வெறும் கனவு, அதன் கடும்போக்கால் பாலஸ்தீனத்துக்கு அழிவு வருமே தவிர நன்மை ஏதும் விளையாது.

இலங்கையில் பிரபாகரன் கோஷ்டி செய்த அதே அடாவடியினை ஹமாஸ் செய்து கொண்டிருக்கின்றது

எந்த தீவிரவாத இயக்கமும் இன்னொரு நாட்டின் பின்னணியில்தான் செயல்படும் நேரம் வரும்பொழுது அந்நாட்டை பஞ்சாயத்துக்கு இழுத்தும் வரும். ஆனால் ஹமாஸ் தன் பின்னணி நாடுகள் எதையும் அமைதி பேச்சுவார்த்தைக்கு இழுத்து வருவதாகவும் தெரியவில்லை அல்லது அப்படி அழைக்கவுமில்லை

நிலமை மிக மோசமாக செல்கின்றது, இஸ்ரேலோ இனி தாக்குதலை நிறுத்தும் திட்டமில்லை என சொல்லியாயிற்று.

துருக்கி முதலான இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீன அமைதிகாக ஐ.நா அமைதிபடையினை அனுப்ப வேண்டும் என்கின்றது இஸ்லாமிய நாடுகளும் அதை வரவேற்கின்றன‌. ஆனால் பாலஸ்தீன அதிபர் அப்பாஸோ, ஹமாஸோ இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பதுதான் உலகின் நெற்றியினை சுருக்கும் கேள்விகுறி.

புலிகள் இந்திய படைகளை கண்டு அஞ்சியது போல் அஞ்சுகின்றார்களா, அமைதிபடை நின்றால் தங்கள் போராட்டம் தொடராது என கருதுகின்றார்களா என்பதுதான் தெரியவில்லை.உலகில் பல விஷயங்கள் குழப்பமானவை, புரிந்து கொள்ளமுடியாதவை, யாரோ எங்கோ பலன் பெற தூண்டிவிடப் படுபவை

ஹமாஸால் இஸ்ரேலை ராணுவரீதியாக வெற்றிகொள்ள முடியாதபொழுது பாலஸ்தீன மக்கள் அமைதியாக வாழ ராஜதந்திரம், சக நாடுகள் மூலம் பாதுகாப்பு என எதையாவது செய்து அவர்கள் வாழ்வுக்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டும்

மாறாக வெல்லவும் மாட்டோம் அதே நேரம் அமைதியாகவும் மாட்டோம் என யுத்த முஸ்தீப்பிலே இருப்பது பாலஸ்தீன மக்களின் எதிர்காலத்துக்கு பெரும் ஆபத்து.பாலஸ்தீன மக்களுக்கு அந்த மக்களின் பெரும் காவலன் அராபத் என்ன தீர்வினை பெற்று கொடுத்தாரோ அதை முழுக்க பெற்றுகொடுத்து அவர்களை அச்சமின்றி காவல்காத்து உரிய காலம் வந்து பாலஸ்தீனம் விடுவிக்கபடும் வரை துணை இருக்க வேண்டியது இஸ்லாமிய நாடுகளின் கடமை.

அதை செய்தால் பாலதீனர்கள் வாழ்வில் வசந்தம் திரும்பும், அது அல்லாது ஹமாஸ் துப்பாக்கியினையும் ராக்கெட்டையும் மட்டும் நம்பி இருந்தால் இந்த கலவரங்கள் ஓயாது, காற்று இஸ்ரேலுக்கு சாதகமாகவே வீசும்

ஒரு தலைவன் உருவாகி அவன் பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக அறியபட்டு தங்கள் வலிகளை அராபத் போல் உலகுக்கு தெரிவிக்காமல் அங்கு அமைதி திரும்பாது.காலம் இன்னொரு அராபத்தை அவர்களுக்கு கொடுக்கட்டும், அந்த பெருமகன் திரும்பி வந்தாலொழிய அவர்களுக்கு அமைதி திரும்ப போவதில்லை   

ஸ்டேன்லி ராஜன் சொல்வதில் எனக்கு சில இடங்களில் உடன்பாடு இல்லை. உதாரணத்திற்கு மேலே கடைசி பாரா. இப்படி சில முரண்கள் இருந்தாலும் தமிழ் இணையச் சூழலில் இத்தனை நிதானமாகப் பிரச்சினையை எழுதுகிறவர்கள் மிகக்குறைவு என்பதால் மட்டுமே எங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

மேலும் விஷயங்களோடு தொடர்ந்து பேசுவோம். 

Sunday, May 16, 2021

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே என்னதான் பிரச்சினை?

இஸ்ரேல் உருவான விதத்தை, இரண்டாம் உலகப்போர் முடிவில் நாஜிகளால் வதைக்கப் பட்ட யூதர்கள் ஜெர்மனி, போலந்து, ரஷ்யா முதலான நாடுகளிலிருந்து புலம்பெயர  தங்களுக்கென்று ஒரு இடத்தைத் தேடியதில் இருந்து ஆரம்பிக்கலாம். அவர்களுடைய பூர்வீகமான இஸ்ரவேல், பாலஸ்தீனமாக இருந்ததைக் கண்டு தாயகம் திரும்ப ஆரம்பித்தார்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம் தான்! ஆனால் கச்சா எண்ணெய் அரசியலும், பிரிட்டனின் குள்ளநரித்தனமும், கிறித்தவ அஃகுறும்புமாகச் சேர்ந்து இப்போதைய பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் வித்தாக இருக்கிறது.

யூதர்களும் பாலஸ்தீனியர்களும் ஏன் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான காரணம் இந்த ஆறு நிமிட வீடியோவில், பிபிசி தமிழ் சொல்கிற மாதிரி எல்லாம் இல்லை. உலகப் போர் முடிந்தபின்னாலும் கூட, பிரிட்டன் தன்னுடைய ஆதிக்கத்தை விடுவதாயில்லை. கூடவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம், கலீஃபா காலத்தைய இஸ்லாமிய சாம்ராஜ்யக் கனவுகளில் இருந்த அரபு நாடுகளும் இவர்களுடன் ஒட்டிக்கொண்ட சோவியத் ஒன்றியமுமாக மறுபுறம் என்று ஆட்டம் ஆரம்பித்ததில், யூதர்களுக்கும் அரபிகளுக்குமான சண்டை என்றானது. 2வது உலகப்போருக்கு முந்தைய வரலாற்றைப் பார்த்தால் கிறித்தவர்களுக்கும் அரபி முஸ்லிம்களுக்கும் நிறைய சண்டைகள் இருந்தது, ஆனால் யூதர்கள் முஸ்லிம்களுக்கிடையே சண்டை ஒருபோதுமிருந்ததில்லை. 

எப்பொழுதுமே மேற்காசியாவில் இஸ்லாமியருக்கு ஒரு தலமை இப்பொழுது இருந்ததில்லை ஆனால் முன்பு இருந்தது கலீபாக்கள், அரசர்கள், சுல்தான்கள் என அவர்கள் வலுவாய் இருந்தவரை சிக்கல் இல்லை, பின்னாளில் சுமார் 400 வருட காலம் ஆட்டோமன் துருக்கியர் அப்படி இருந்தனர்

முதல் உலகபோரில் அவர்கள் வீழ்ச்சி அடைந்தபின்பு அதை தொடர்ந்து அரேபியாவில் எண்ணெய் கண்டறிய பட்ட பின்பே இவ்வளவு குழப்பங்கள்,

வரலாறு ஒரு உண்மையினை சொல்கின்றது, அதை நீங்களும் நானும் ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

நபிகள் காலம் முதல் ஆட்டோமன் காலம் வரை பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்தனர், அரேபியாவில் வாழ்ந்தனர், ஆனால் ஒரு யூதனும் தாக்கபடவில்லை இஸ்லாமியர் ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர்

ஆனால் கிறிஸ்தவ தேசங்களான ஸ்பெயின் முதல் ரஷ்யா வரை அவர்களை போட்டு சாத்தினார்கள், கடைசியில் போட்டு மிதித்து குத்தாட்டம் ஆடியவன் ஹிட்லர் அவனுக்கு முன் ஆடியவன் கிறிஸ்தவ புரட்சியாளன் மார்ட்டின் லுத்தர் ஆக இஸ்லாமிய ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாக இருந்ததும், இப்பொழுது யூதர்கள் ஆட்சியில் இஸ்லாமியர் கொல்லபடுவதெல்லாம் வரலாற்று முரண்

ஆட்டோமன் துருக்கியருக்கு பின் வலுவான இஸ்லாமிய தலைமை இல்லை, அந்த இடத்தை துருக்கியின் கமால் பாட்சா கூட முயற்சிக்கவில்லை.ஆனால் 1960களில் எகிப்தின் கர்ணல் நாசர் அதை கைபற்றினார், அரபுக்களின் தலைவராய் இருந்தார் ஆனால் அமெரிக்கா இஸ்ரேலை முன்னுறுத்தி செய்த விண்வெளி போரில் அவர் தோற்றார்.

அவருக்கு பின் சதாம் உசேனுக்கு அந்த வாய்ப்பு இருந்தது, ஆனால் எண்ணெய் பணத்துக்கு ஈராக் பணம், எண்ணெய் பணம் மக்களுக்கே என அவர் எழுந்தது பல அரேபிய அரசர்களுக்கு பிடிக்கவில்லை

அதே நேரம் கொமேனியின் எழுச்சி ஷியா சன்னி மோதலை உக்கிரமாக்கி விவகாரம் திசைமாறி சதாம் வீழ்த்தபட்டார்.லிபிய அதிபர் கடாபிக்கு அந்த அரபு தலைவர் ஆசை வந்தது, அவரையும் "புரட்சி" என சொல்லி ஒழித்து கட்டினார்கள்

இப்போது அரேபியாவில் வலுவான தலைமை  ஈரான் ஆனால் அவர்களிடம் பணமில்லை வலிமையான ஆயுதமில்லை. சவுதி மிக சக்திவாய்ந்த எண்ணெய் வளநாடு, ஆனால் இஸ்ரேலுடன் ஒரு ரகசிய புரிதலில் உள்ளது. இப்போதைக்கு ஒரு பலமான படைகொண்ட நாடு நிச்சயம் துருக்கி, நேட்டோவின் நாடு ஐரோப்பிய ஒன்றிய நாடு என பலம் அதிகம்.எர்டோகன் இஸ்லாமிய தலைவராக பழைய ஆட்டோமன் சாம்ராஜ்ய வாரிசாக கருதிகொள்கின்றார், துருக்கியின் ஆட்சியில் நீடிக்க மக்கள் ஆதரவை பெற அவருக்கு இது நல்ல வாய்ப்பு. உண்மையில் மக்கள் அவரை கொண்டாடுகின்றார்கள், அவர் சொல்லுக்கு துருக்கி கட்டுபடுகின்றது

காஷ்மீர் முதல் பல விஷயங்களில் அவர் இஸ்லாமிய நலன் பேசுகின்றார், இஸ்லாமுக்கு எதிரான நாடுகளை துணிச்சலுடன் எதிர்க்கின்றார்.ஆர்மேனியா அசர்பஜான் மோதலில் ரஷ்யாவினை தாண்டி அசர்பைஜான் எனும் இஸ்லாமிய நாட்டுக்கு வெற்றியினை கொடுத்தது துருக்கி. உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக நிற்கும் நாடு துருக்கி.சிரியாவில் அமெரிக்காவின் கனவு நிறைவேறாமல் இருக்க மிக பெரிய தடையாக தன் ராணுவத்தை நிறுத்தியிருப்பது துருக்கி.உய்குர் விவகாரத்தில் சீனாவினை கண்டித்த நாடு துருக்கி, பிரான்ஸ் அரசின் இஸ்லாமிய விரோதத்தை கண்டித்து மொத்தமாக பொங்கி எழுந்த நாடு துருக்கி.

அந்த துருக்கியின் எர்டோகன் பாலஸ்தீனத்துக்கு தன் துருக்கிய படைகள் செல்லும் என அறிவித்துவிட்டார், இதற்கு துருக்கி மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தாயிற்று.எகிப்தின் கர்ணல் நாசருக்கு அடுத்து இந்த அறிவிப்பை எழுப்பிய ஒரே தலைவர் அவர்தான். அல் அக்சா மசூதியினை காக்க துருக்கிய படைகள் அமைதி படையாக செல்ல தயார் என அவர் அறிவித்திருப்பது உலக நாடுகளை யோசிக்க வைத்திருக்கின்றது, இதுவரை அமைதிபடை அங்கு இல்லை.

ஆனால் துருக்கி அறிவித்ததே தவிர படை அனுப்ப முடியாது, காரணம் அது பல சிக்கல்கள்.முதலில் அந்த அல் அக்சா மசூதியின் அறங்காவலர் ஜோர்டான் மன்னர், அவர் இன்னும் வாய் திறக்கவில்லை. இரண்டாவது ஐ.நா சபை இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் அவர்களும் அமைதி. இஸ்ரேலை மீறி அல் அக்சா பக்கம் ஐ.நா அமைதி படை அல்லது இஸ்லாமிய அமைதிபடை வருவது எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை

இவ்வளவு சீரியசான விஷயத்தை இஸ்ரேல் சும்மா விடுமா? அது நேற்றே அலறலை ஆரம்பித்துவிட்டது

"பாலஸ்தீன கலவர வன்முறைக்கும் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கும் துருக்கிதான் பொறுப்பு, அவர்கள்தான் தூண்டி விடுகின்றார்கள், எங்களிடம் ஆதாரம் உண்டு" விஷயம் சீரியசாகின்றது, துருக்கி அதிபர் ஒரு இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவராக எழ கூடாது என வல்லரசுகள் கண் வைக்கின்றன‌

நாசர் முதல் கடாபி வரை என்ன நடந்ததோ அதையே எர்டோகனுக்கும் என்பது போல் முறைக்கின்றன, ஆனால் எர்டோகன் இதை அறியாதவர் அல்ல‌.

நேட்டோவில் இருந்து பிரியுமானால் துருக்கி மிகபெரிய பொருளாதார சரிவை சந்திக்கும், ராணுவ பலமும் கிடைக்காது என்பதும் இன்னொரு கோணம்.எப்படியோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பெரும் குரல் கேட்க தொடங்கிவிட்டது, ஆனால் எர்டோகனால் வெல்ல முடியுமா என்பது பெரும் கேள்வி.

லிபிய கடாபியினை மக்கள்  தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள், அவ்வளவு அழகான ஆட்சி அவருடையது, லிபியா பிரான்ஸுக்கு நிகரான பொருளாதார பலம் கொண்டிருந்தது.அனால் அந்த மக்களை வைத்தே அவரை விரட்டினார்கள். பாலஸ்தீனத்தில் தலையிட்டிருப்பதால் எர்டோகனோ இல்லை துருக்கியோ சிக்கல்களை சந்திக்க போவது நிஜம், 

ஆனால் அதையும் மீறிய தெய்வம் என ஒன்று உண்டல்லவா? அந்த தெய்வம் எது நியாயமோ, எது தர்மமோ, அதை செய்யட்டும்.யாருடைய கண்ணீரும் ரத்தமும் அனுதினமும் சிந்தபடுகின்றதோ அதை நிறுத்தட்டும்

சமநேரத்திலேயே இன்னொரு பகிர்வையும் ஸ்டேன்லி ராஜன் முகநூலில் பகிர்ந்திருக்கிறார்:  

ஒருவனுக்கு தலைவிதி நன்றாக இருந்தால் அவனுக்கு சூழல் ஒத்துழைக்குமாம் இது சாணக்கியன் சொன்னது, அலெக்ஸாண்டர் வாழ்வில் இருந்து தமிழக கருணாநிதி வாழ்வு வரை இதை காணலாம் இப்பொழுது அந்த யோகம் புட்டீனுக்கு.அவருக்கு உக்ரைன் பக்கம் மிகபெரிய சிக்கல் இருந்தது, அது இன்னமும் நீடிக்கின்றது. நேட்டோ என 29 நாடுகளை தனியே எதிர்க்கின்றது ரஷ்யா இந்த 29ல் துருக்கியும் உண்டு.இந்நிலையில்தான் வாய்ப்பு பாலஸ்தீனத்தில் ரஷ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது, தன் எல்லையில் நடந்த பரபரப்பை இஸ்ரேலிய எல்லைக்கு நகர்த்திவிட்டார் புட்டீன்

ஐ.நாவில் கடும் சத்தம், அவசர மசோதா என பந்தை அப்பக்கம் தள்ளி துருக்கியினை உள்ளே இழுத்து போட்டு ஆடுகின்றது ரஷ்யா. துருக்கியின் அமைவிடம் இலங்கை போல முக்கியமானது, கருங்கடல் மத்திய தரைகடல் அசோர் கடல் என ரஷ்யாவின் அருகிருக்கும் கடல் எல்லாம் அவர்களுடைய ஏரியா.நேட்டோ என துருக்கியினை சேர்த்து ஐரோப்பா படியளக்க அதுதான் காரணம்

துருக்கி சர்வதேச அமைதிபடை அல்லது இஸ்லாமிய படை ஜெருசலேமுக்கு செல்ல வேண்டும் என சொல்வதில் ரஷ்ய கரங்களும் இல்லாமல் இல்லை.தன் காலடியில் அமெரிக்கா தீயினை பற்றவைக்க முயல, இஸ்ரேல் பக்கம் தீயினை வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் அமர்ந்திருக்கின்றார் புட்டீன்

காற்று இப்பொழுது அவருக்கு சாதகம், சிரியாவில் கடுமையாக நிலைகொண்ட ரஷ்யா இஸ்ரேலுக்கு மிகபெரிய சவால்.சர்வதேச அரசியல் சதுரங்கம் சுவாரஸ்யமாகத்தான் சென்று கொண்டிருகின்றது

இரண்டும் கொஞ்சம் முரண்படுகிற மாதிரித்தான் இருக்கிறது இல்லையா? ஒருவாரமாக இதுதொடர்பாக நிறைய வாசித்துக்கொண்டிருக்கிற எனக்கே இதை எங்கிருந்து ஆரம்பிப்பது, முடிப்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பம்!   

ஆனால் விஷயம் சிம்பிள். நீயா நானா என அமெரிக்கா+ ஒருபுறமும் ரஷ்யா மறுபுறமுமாக இந்தப் பிரச்சினையை வைத்து FootBall ஆடிக்கொண்டு இருப்பதில் உதைபந்தாக இருப்பது நிச்சயமாக இஸ்ரேல் இல்லை. அவர்கள் விளையாட்டே தனி!

இன்னும் கொஞ்சம் விவரங்களோடு தொடர்வோம்.  

Saturday, May 15, 2021

இஸ்ரேலிடம் ஒரண்டை இழுக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் அமைதியைக்குலைப்பது யார்?

பாலஸ்தீனிய மக்களின் சோகம் முடிவே இல்லாமல் தொடர்வதற்கு, அவர்களுடைய ரட்சகனாக சொல்லிக் கொள்ளும் ஹமாஸ் தீவிரவாத இயக்கமே முழு முதல் காரணமாக இருப்பதை நம்மில் எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறோம்? இஸ்ரேல் பாலஸ்தீனியர் இடையே ஆன பிரச்சினையை நம்மூர் செகுலர், லிபரல்களிடம் அல்லாது இணையத்தில் தேடிப்பார்த்தாலே ஒருவாறு புரிந்து கொள்ள முடியும்.   


ரம்ஜான் நெருங்கும் நேரமாகப்பார்த்து Gaza பகுதியில் இருந்து இஸ்ரேலை வம்புச்சண்டைக்கு ஹமாஸ் இழுப்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல.5, 6 நாட்களுக்கு முன் இஸ்ரேல் மீது சுமார் 2000 ராக்கெட்டுகள் Gaza பகுதியில் இருந்து வீசப்பட்டதில் பெரும்பாலானவை Iron Dome என்கிற மூன்றடுக்குப் பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டுவிட்டன. அதை மீறியும் சில ராக்கெட் வெடி குண்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் விழுந்து சேதம் விளைவித்திருக்கின்றன . பதிலுக்கு இஸ்ரேல் Gaza பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் கட்டடம் ஒன்றைத் தகர்த்ததில் ஹமாஸ் இயக்கத்தின் பெரியதலைகள் சில உருண்டதோடு கதை முடியவில்லை. இஸ்ரேலை அழிப்பது தான் தங்களுடைய குறிக்கோள் என்று நீண்டநாட்களாகவே அறிவித்துச் செயல்படுகிற ஹமாஸ் இயக்கத்தை அடியோடு களைவதுதான் தங்களுடைய தலையாய பணி என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவித்திருக்கிறார். 


அல் ஜசீரா, அசோசியேடட் பிரஸ் என்று பல ஊடகங்கள் காசா பகுதியில் இயங்கிவந்த கட்டடத்தை  இன்று இஸ்ரேல் முன்னவிப்புச் செய்து தகர்த்த காட்சி மேலே ஒருநிமிட வீடியோவாக. Gazaவில் என்ன நடக்கிறது என்பதை இனி உலகம் தெரிந்துகொள்ள முடியாது என  அசோசியேடட் பிரஸ் சொல்லியிருப்பதாக ஒரு செய்தி. Responding to the development, AP said in a statement: “This is an incredibly disturbing development. We narrowly avoided a terrible loss of life. A dozen AP journalists and freelancers were inside the building and thankfully we were able to evacuate them in time.” இவ்வளவு சொன்னவர்கள், இஸ்ரேலி ராணுவம் முன் அறிவிப்புக் கொடுத்து, பாதுகாப்பாக வெளியேறும்படி சொன்னதையும் சேர்த்தே சொல்லியிருக்கலாம்!

Replying to
According to reports, people inside the building were given one hour's notice to evacuate. Multiple roof knocks were fired ahead of the strike that demolished the building. Associated Press reports that there has been no immediate explanation for why the building was targeted.

மத்தியகிழக்கில் அமைதியை நிலைநாட்ட  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு சிறப்பு தூதரை அனுப்பி வைத்திருக்கிறாராம்! 

In recent days, the Biden administration has dispatched an envoy to the Middle East and engaged in a flurry of back-channel diplomacy to respond to the surge in violence between Israel and Hamas militants in the Gaza Strip. The big question is: Does the United States have the appetite, or even the political maneuvering room, to be an honest broker? ஜோ பைடன் அமைதியை நிலைநாட்ட என்ன செய்து விட முடியுமாம் என்ற கேள்வியோடு ForeignPolicy தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. 


அல் ஜசீராவின் ஒருமணிநேர ஒப்பாரி

மத்தியகிழக்கில் என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம். 

Thursday, April 22, 2021

சீனாவின் ஒரேபெல்ட் ஒரேரோடு கனவுத் திட்டம் அவ்வளவுதானா?

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது கலகக்காரர்கள்,  கம்யூனிஸ்டுகளுக்கு ரொம்பவுமே பொருத்தம் என்பதை சீனா இன்னுமொரு முறையும்  நிரூபித்திருக்கிறது. ஒரேபெல்ட்  ஒரேரோடு என்பது சீனாவின் கனவுத்திட்டமாக, ஆதிக்க விஸ்தரிப்புக்கு அடித்தளமாக இருந்தது, இப்போது உலகின் பலபகுதிகளிலும் நிராகரிக்கப்படுகிற ஒன்றாக ஆகிக் கொண்டிருப்பதில், ஆஸ்திரேலிய மாகாணம் ஒன்று சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ஃபெடரல் அரசால் நேற்றைக்கு தேசநலன் கருதி  ரத்து  செய்யப் பட்டிருப்பதில், மிகுந்த வன்மத்துடன் சீனா அதைக்குறித்து எதிர்வினையாற்றியிருப்பதில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.  

  

ஆஸ்திரேலிய விவகாரங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறவர்களுக்கு, சீனக்கம்யூனிஸ்ட் எந்த அளவுக்கு ஆஸ்திரேலியாவின் அரசியல் விவகாரங்களில் ஊடுருவி இருந்தது, ஆதரவுக்குரல் கொடுப்பதற்காக உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு பணம்கொடுத்து போஷித்து வந்தது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை தான்! சீனா தனது ஆட்டத்தை ஓவராகவே ஆடியதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற நேரமும் வந்து விட்டது போலத் தெரிகிறது. OBOR / BRI திட்டம் உலகின் பலபகுதிகளிலும் முட்டுச்சந்தில் வந்து நிற்பதை என்ன என்று சொல்வது? China’s reaction to the cancelling of the dangerous Belt and Road agreement in a “wolf warrior fashion” will end up being a large “own goal” for Beijing, according to the Australian Strategic Policy Institute’s Michael Shoebridge.


ஷி ஜின்பிங்கின் கனவுத்திட்டம் கொஞ்சம் நிதானமாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால் நிறைவேறியிருக்கக் கூடிய சாத்தியம் உள்ளதுதான்! தனது ஆயுட்காலத்திலேயே நடத்திக் காட்டிவிட வேண்டுமென்கிற ஆத்திரமும் அவசரமும் ஷி ஜின்பிங்கை தோற்கடித்துவிடும் என்று தான் இப்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன. China Belted and Roaded என்று தலைப்பிட்டு இந்தச் செய்தியை Daily Telegraph நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்துவரும், முட்டாள்தனங்கள் மட்டும்தான், இப்போது சீனாவுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருக்கின்றன என்றால் அப்படி ஒரு அனுமானத்தில் தவறில்லை.

?

ஸ்ரீலங்காவிலும் சீனாவின் சாகசங்கள் கேள்வி கேட்பார் இல்லாமல் தொடர்ந்து வருவதில், கொஞ்சம் எதிர்ப்பு கிளம்பி வருவது சற்றே ஆறுதல். ஆனால் ராஜபட்ச சகோதரர்கள் ஆட்சியில் ஸ்ரீலங்கா சீனாவின் அடிமை நாடாக ஆக்கப்படுவதை இதுமாதிரி சிறு சலசலப்பு தடுத்து நிறுத்திவிடுமா?

மீண்டும் சந்திப்போம்.

     
  

Wednesday, March 31, 2021

சீனா நாட்டாமை செய்ய அமெரிக்காவே வலிந்து இடம் கொடுக்கிறதா?

மேற்கு ஆசியாவில் சீனா தனது பணபலத்தை வைத்து நுழைந்திருக்கிறது. பாரக் ஒபாமா அதிபராக இருந்த நாட்களில் ஈரானுடன் ஏற்படுத்திக் கொண்ட அணு ஒப்பந்தத்திலிருந்து முந்தைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியேறியதுடன் பொருளாதாரத்தடைகளையும் விதித்தார். இப்போது டெமாக்ரட்டுகள் மீண்டும் பதவிக்கு வந்திருப்பதால் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் மறுபடி நுழைய விரும்புகிறார்கள்.



அடுத்துவரும் 25 ஆண்டுகளில்  400 பில்லியன் டாலர்கள் முதலீடு என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புடன் ஈரானுடன் சீனா ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறது. "இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இருப்பினும் அமெரிக்காவின் தடைகளை மீறும் வண்ணம் சீனா இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் என்று ஊகிக்கப்படுகிறது.இரான் மீது விதிக்கப்பட்ட தடையால் இரான் வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் தடுமாறியது. சர்வதேச வல்லமை பெறுவதற்கான சீனாவின் 70 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் முதலீடு செய்யும் திட்டத்தின் ஒரு விரிவாக்கமாகவே இந்த ஒப்பந்தம் உள்ளது.

கடந்த வருடம் இந்த ஒப்பந்தத்தின் வரைவு கசிந்த பிறகு சீனாவின் எண்ணம் குறித்து இரானியர்கள் சிலர் சந்தேகித்தனர். சீனாவின் `பெல்ட் அண்ட் ரோட்` திட்டம் சீனாவுக்கே அதிகம் பயனளிக்கக்கூடியது. இதில் சில சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஏமாற்றம் அடைந்தன. (அதில் இடம்பெற்றுள்ள நாடுகள் பல சீனாவைக் காட்டிலும் சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஆகும்.) " என்று பிபிசி தனது செய்தியில் சொல்கிறது

இதில் வேடிக்கையான அம்சம் என்னவென்றால் அதிக ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்படும் சீன முதலீடுகள், திட்டம் எதுவும் இதுவரை முழுமையாக நிறைவேறியது இல்லை என்பதுதான். ஆனாலும் சீனவலையில் ஈரான் போன்ற பலநாடுகளும் வலுவில் வந்து விழுவது குறையவே இல்லை.   


ஏற்கெனெவே ஈரானுடன் சபஹர் துறைமுகத்தை  நவீனமயமாக்கும் ஒப்பந்தம் செத்துக்கொண்டிருக்கும் இந்தியா எதிர்நோக்கும் சவால்கள் என்ன என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்கர்களுடைய நம்பர் 1 இடத்தைப்பிடிக்கும் சீன முயற்சிகளுக்கு, அமெரிக்காவே இடம் கொடுக்கும் விசித்திரத்தைப் பார்க்கப்போகிறோமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.      


Thursday, March 18, 2021

ஜோ பைடன் தள்ளாடுகிறார்! சீனாவுக்கு ஈடு கொடுக்க அமெரிக்காவால் முடியுமா?

அமெரிக்காவின் புது அதிபர் ஜோ பைடன் வாயைத் திறந்தால் ஏழரையைக் கூட்டிக் கொள்வது என்று கொள்கை முடிவோடு இருப்பார் போல. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஒரு கொலைகாரர், அதற்கான விலையை அவர் கொடுத்தே ஆகவேண்டும் என்று ஒரு பேட்டியில் சொன்னது பெரும் சர்ச்சையை மட்டுமல்ல, ராஜீய உறவுகளில் சிக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது.


பாம்பின் கால் பாம்பறியும் என்று புடின் பதிலடி கொடுத்ததோடு நிறுத்திக் கொள்ளவில்லை, அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதரையும் திருப்பி அழைத்திருக்கிறார்.


Russia called its US ambassador back to Moscow for consultations on Wednesday after Joe Biden described Vladimir Putin as a "killer" who would "pay a price" for election meddling, prompting the first major diplomatic crisis for the new American president. என்கிறது AFP.. முந்தைய பனிப்போர் நாட்களில் சோவியத் யூனியனை பிரதான எதிரியாகக் கருதிய பழைய நினைப்பிலேயே ஜோ பைடன் நிர்வாகம், ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பது மோசமான ஒரு துவக்கம் என்றால் அதிபரின் பொறுப்பற்ற பேச்சு சிக்கலை இன்னும் பெரிதாக்கியிருக்கிறது.QUAD அமைப்பை முன்னெடுத்துச் செல்கிற மாதிரி கடந்த வாரம் ஜோ பைடன் ஒரு ஷோ காட்டியிருந்தாலும், சீனாவை எதிர்கொள்வதில் ஒரு இரண்டும்கெட்டான் நிலையைக் கடைப்பிடிக்கிற தோற்றமும் இருக்கிறது. இன்றைக்கு அலாஸ்காவில்  சீனர்களோடு பேச்சு வார்த்தையை நடத்தவிருக்கிறார்கள். முந்தைய பதிவில் வட கொரியா தனது எரிச்சலைப் பகிரங்கமாக வெளிப் படுத்தியிருந்ததையும், சீனர்களோடு பேசுவார்களாம்!

“Beijing has an interest, a clear self-interest in helping to pursue denuclearisation of [North Korea] because it is a source of instability. It is a source of danger and obviously a threat to us and our partners,” Blinken told reporters in Seoul after he and the US defence secretary, Lloyd Austin, had met their South Korean counterparts.As a permanent member of the UN security council, China was also duty-bound to fully enforce sanctions imposed on North Korea in response to its nuclear weapon and ballistic missile programmes, Blinken said.என்கிறது இந்தச் செய்தி.   


சீனாவைக் கையாளுவதில் டொனால்ட் ட்ரம்பின் அணுகு முறையை ஜோ பைடனும்  அப்படியே பின்பற்றுகிற மாதிரி ஒரு தோற்றம் இருந்தாலும், மேலே ஒரு 25 நிமிட விவாதத்தில் ஜோ பைடனின் சீனாவுக்கெதிரான QUAD கூட்டணி எடுபடுமா என்பதை அலசுகிறார்கள்.

வடகொரியாவை அடக்கி வைக்கும்படி சீனர்களிடம் மன்றாடுவதிலிருந்தே ஜோ பைடன் நிர்வாகத்தின் china policy ஒரு தெளிவில்லாமல் தள்ளாடுவதும் வெளிப்பட்டிருக்கிறது. நேசநாடுகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் இதுவரை உருப்படியான செயல்திட்டம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. மிகவும் பலவீனமான அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருக்கப்போகிறாரா என்பதைக் காலம்தான் தெளிவு படுத்தவேண்டும்.  

மீண்டும் சந்திப்போம்.

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை