Tuesday, February 25, 2020

#அக்கம்பக்கம் மலேசியா! சிங்கப்பூர்! தென்கொரியா!

ஞாயிறு முதலே மலேசியாவில் ஒரு அரசியல் வெறுமை அடுத்து என்ன என்பது எவருக்கும் புரியாதபடி ஆட்டிப் படைக்கிறது. ஆளும் பகத்தான் ஹராப்பான் (நம்பிக்கை கூட்டணி)  சிதைந்து மலேசிய பிரதமர் மகாதிர் மொகமது தனது பிரதமர் பதவியை திங்களன்று  ராஜினாமா செய்ததை  மலேசிய மன்னரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.



மன்னர் கேட்டுக்கொண்டதன் பேரில் கேபினெட் அமைச்சர்கள் இல்லாத இடைக்கால பிரதமராக மகாதிர் மட்டும் நீடிக்கிறார். அதாவது மகாதிர் எப்போது விரும்புகிறாரோ அப்போது தனது அமைச்சர்களை நியமித்துக் கொள்ள முடியுமாம்! அதற்கென்று எந்தக்காலவரையறையும் இல்லை என்பது மலேசிய அரசியல் சட்ட விசித்திரம்!

   
94 வயதாகும் மகாதிர் மொகமது தன்னுடைய சொந்தக்கட்சியிலிருந்தும் விலகிவிட்டார் என்பது இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் கூட்டுகிறதோ? சிலகாலத்துக்கு முன்புதான் ஏற்கெனெவே ஒப்புக்கொண்டபடி இன்னொரு கூட்டணிக்கட்சித்தலைவர் அன்வர் இப்ராஹிமிமிடம் பிரதமர் பொறுப்பைக் கொடுத்து விட்டு ஒதுங்கிவிடுவேன் என்று சொல்லியிருந்தார்.



மகாதிர், அன்வர் இருவருடைய கட்சியிலிருந்தும் அன்வர் பிரதமராகிவிடக் கூடாதென்று கருதும் தரப்பே இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் என்று அன்வர் இப்ராஹிம் கருதுகிறார். இதன் பின்னணியில் மகாதிர் பங்கெதுவும் இல்லையென்றும் நம்புகிறாராம்! இந்த இருவருக்கிடையிலுமான உறவு-பிரிவு நீண்ட கதை.


ஆனால் நேற்றைக்கு முதலீட்டாளர்கள் வெளியேறியது மிக அதிகமாக இருந்த காரணத்தால் பர்சா மலேசியா என்கிற பங்கு வர்த்தகக்குறியீடு கடந்த எட்டாண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்திருக்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை கொஞ்சம் போல சரிவில் இருந்து மீண்டதாகச் செய்திகள் சொல்கின்றன. ஊழலை எதிர்க்கிறோமென்று அமைந்த கூட்டணி வேறு பொதுவான நோக்கமெதுவுமில்லாததால்  இரண்டே ஆண்டுகளில் கவிழ்ந்ததில் ஆச்சரியமில்லை தான்! அடுத்து அமைவதாவது நிலைக்குமா என்பது இப்போதைக்கு விடை தெரியாத கேள்விதான்!

   
சிங்கப்பூர் சீனாடவுனில் ஒரு பெண்ணுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதிக்கிறார்கள். கரோனா தொற்று இருக்கிறதா என்ற கவலையே இல்லாமல் காமெராவைப் பார்த்து போஸ் கொடுப்பதில்தான் அம்மணிக்கு கவனம் அதிகம் போல! அப்படியும் சொல்லலாம் Covid -19 தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க சிங்கப்பூர் அரசு எடுத்துவரும் முயற்சிகளில் முழு நம்பிக்கை என்றும் கூட! 


சீனாவுக்கு அடுத்தபடி கரோனா வைரஸ் தொற்று மிக அதிகமாக இருப்பது தென்கொரியாவில் தான்!  893 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது 6 மணி நேரத்துக்கு முந்தைய நிலவரம். உயிர்க்கொல்லி என்பதோடு பல நாடுகளின் பொருளாதாரத்தையும் சரித்து விடக்கூடியது என்பதைக் கவலையோடு கவனிக்க வேண்டியிருக்கிறது. கரோனா தொற்றால் சாம்சங் தென்கொரியாவில் ஒரு தொழிற்கூடத்தையே மூடிவைக்கிற அளவுக்கு ஆகியிருக்கிறது.

சீனாவில் இரண்டுமாதங்களுக்கும் மேலாக ஆட்டிப் படைக்கும் கரோனா வைரஸ் ஏழரைக்  கோடி ஜனங்களை quarantine இல் முடக்கி வைத்திருக்கிறது. சிறு தொழில்கள், வணிகமும்  கூடத்தான்! 

மீண்டும் புதிய செய்திகளுடன் சந்திப்போம். 

4 comments:

  1. தவறான உணவுப் பழக்க வழக்கம் ..

    சில காலத்துக்கு ஏனைய உயிர்களைக் கொன்று உண்ண வேண்டாம் என்று அறிவுறுத்தினால்

    வேறு சிலர் ஏளனம் செய்கின்றனர்...

    கடவுள் தான் காக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!


      வெறும் வீணருக்கு உபதேசம் செய்யாமல் இருக்கலாமே!

      Delete
  2. தன்னுடைய திருமணத்துக்காக பிப்ரவரி பதினைந்து தேதி வாக்கில் சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்திருக்கும் என் நண்பரின் மகன் மார்ச் எட்டாம் தேதி சிங்கப்பூர் திரும்பவேண்டும்.  அங்குதான் அவன் பணிபுரிகிறான்.  பிரச்சனை ஒன்றும் இருக்காது என்றே நம்புகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. சிங்கப்பூரில் பிரச்சினை இருப்பதாகத் தகவல்கள் இல்லை ஸ்ரீராம்! அங்கே முழுவீச்சுடன் நோய்த்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை